சின்னஞ்சிறு கிளியே: எதிர்நீச்சல் தொடர் பாணியில் புதிய தொடர்!
பாராமதி சர்க்கரை ஆலையை கைப்பற்றபோது யார்? - அஜித் பவர் - சரத் பவார் இடையே கடும் போட்டி!
மகாராஷ்டிராவில் கடந்த 2023-ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் இரண்டாக உடைந்த பிறகு துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் கட்சியின் நிறுவனர் சரத் பவார் இடையே பாராமதியை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதில் கடும் போட்டி நிலவி வருகிறது. பாராமதி மக்களவை தேர்தலில் சரத்பவார் மகள் சுப்ரியா வெற்றி பெற்றுவிட்ட நிலையில், சட்டமன்ற தேர்தலில் அஜித் பவார் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியில் பங்கெடுத்துள்ளது.
தலைவர் பதவிக்கு போட்டியிடும் துணை முதல்வர்
அஜித் பவாருக்கு கட்சியின் சின்னம் மற்றும் பெயர் கிடைத்து இருப்பது அவருக்கு சாதகமான ஒரு அம்சமாக பார்க்கப்படுகிறது. இப்போது பாராமதியில் உள்ள மாலேகாவ் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கைப்பற்ற சரத் பவார் மற்றும் அஜித் பவார் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இத்தேர்தல் இருவருக்கும் கெளரவ பிரச்னையாக அமைந்துள்ளது. இத்தேர்தல் நேற்று பலத்த பாதுகாப்போடு நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு அஜித் பவார் போட்டியிடுகிறார்.

மொத்தமுள்ள 21 பதவிகளுக்கு அஜித் பவார் சார்பாக நில்கண்டேஷ்வர் அணி போட்டியிடுகிறது. சரத் பவார் சார்பாக அவரது பேரன் யுகேந்திர பவார் தலைமையில் பாலிராஜா சகாகர் பச்சாவ் என்ற அணி போட்டியிடுகிறது. இது தவிர பவார் குடும்பத்திற்கு எதிராக செயல்பட்டு வரும் ராஜன் தவாரே தலைமையில் ஒரு அணியும் போட்டியிருகிறது. துணை முதல்வர் பதவியில் இருந்து கொண்டு சர்க்கரை ஆலை தலைவர் பதவிக்கு அஜித் பவார் போட்டியிடுவதாக விமர்சனம் எழுந்தது. ஆனால் சர்க்கரை ஆலை தலைவர் பதவிக்கு போட்டியிட எனக்கு உரிமை இருக்கிறது என்று அஜித் பவார் தெரிவித்துள்ளார். இத்தேர்தல் முடிவுகள் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
சர்க்கரை ஆலை தேர்தலில் 37 கிராமங்களை சேர்ந்த 19 ஆயிரம் பேர் வாக்களித்து இருக்கின்றனர். தேர்தலில் வாக்களித்த பிறகு சரத் பவார் மகள் சுப்ரியா சுலே பேசுகையில், ''ஒவ்வொரு தேர்தலும் முக்கியமானது. கூட்டுறவு துறைக்கு இத்தேர்தல் மிகவும் முக்கியமானது. தேர்தல் வெளிப்படையாக நடக்கவேண்டியது அவசியம்''என்று தெரிவித்தார்.
பாராமதியில் உள்ள பிடிசிசி வங்கியில் இரவு 11.30 மணிவரை அஜித்பவார் அணியினர் சர்க்கரை ஆலை உறுப்பினர்களை வரவழைத்து பணம் கொடுத்ததாக சரத்பவார் அணியினர் குற்றம் சாட்டியுள்ளனர். வங்கி இரவு 11.30 வரை திறந்திருக்கவேண்டிய அவசியம் என்ன என்று அவர்கள் கேள்வி எழுப்பினர். அஜித் பவார் கடந்த சில நாட்களாக பாராமதியில் தங்கி இருந்து தேர்தல் பணிகளை கவனித்து வந்தார். 8க்கும் மேற்பட்ட கூட்டங்களில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.

1985ம் ஆண்டுக்கு பிறகு அஜித் பவார் முதல் முறையாக இந்த சர்க்கரை ஆலை தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகிறது. மகாராஷ்டிராவில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் அரசியல் கட்சிகளிடையே மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இச்சர்க்கரை ஆலைகளில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் கரும்பு விவசாயிகள் ஆவர். எனவே சர்க்கரை ஆலையை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்க அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.