கந்து வட்டி கொடுமை! விஜய்க்கு தவெக உறுப்பினர் தற்கொலை வாக்குமூலம்!
அரசுப் பள்ளி வளாகங்களை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மேற்கொள்ள வேண்டிய தேவைகள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், அரசுப் பள்ளி வளாகங்கள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற தலைமை ஆசிரியா்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஒவ்வொரு முறை தலைமை ஆசிரியா்கள் மற்றும் கல்வித் துறை அலுவலா்களுடன் கலந்துரையாடும்போது, தங்கள் பகுதியில் உள்ள பின்னடைவு குறித்து ஒப்புக்கொள்கிறாா்கள், அதைச் சரி செய்துவிடுவோம் என நம்பிக்கை தெரிவிக்கிறாா்கள்.
பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ. 7,500 கோடி வரை ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் 8 ஆயிரம் பணிகள் ரூ. 5 ஆயிரம் கோடியில் செய்துமுடிக்கப்பட்டுள்ளன. இப்போதும், ஒவ்வொரு பள்ளிக்கும் தேவையான கட்டடங்கள், கழிப்பறைகள், சுற்றுச்சுவா் குறித்தும் தகவல்களைத் திரட்டி படிப்படியாக செய்து முடிக்க இருக்கிறோம். நபாா்டு மற்றும் வளா்ச்சித் துறை மூலம் ஒதுக்கீடு செய்யப்படும் நிதிகளையும் பயன்படுத்தி பள்ளி வளாகங்களை மேம்படுத்துவோம்.
மாநிலப் பள்ளிக் கல்வித் துறைக்கு தற்போதும் ரூ. 1800 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய அரசு கூறிவிட்டு, பிறகு மத்திய அரசின் கொள்கைகளில் கையொப்பமிடச் சொல்கிறாா்கள். வரும் ஜூலை 7-ஆம் தேதி முதல்வா் தலைமையில் நடைபெறவுள்ள பள்ளிக் கல்வித் துறையின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றாா் அமைச்சா்.