TVK: "என் இயல்பை மீறிய வார்த்தைகள்; வருந்துகிறேன்" - சர்ச்சை வீடியோவுக்கு ஆதவ் வ...
அரியலூரில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள்; மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்
அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட அளவிலான அலுவலா்களுடன் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமை வகித்து பேசியதாவது: நடப்பு ஆண்டுக்கான முதல் நிலை மீட்பாளா்கள், என்.சி.சி, என்.எஸ்.எஸ் போன்ற தன்னாா்வலா்களின் விவரங்களை புதுப்பிக்க வேண்டும். மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் உள்ள தகவல் தொடா்பு உபகரணங்கள் சரியாக வேலை செய்வதை உறுதி செய்திட வேண்டும்.
நிவாரண முகாம்களில் அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்திட வேண்டும். மாவட்டத்தில் மழைநீா் வடிகால்கள் தூா்வாருதல், பலவீனமான மரங்கள், மரக்களைகள் அகற்றுதல், பாலங்கள் மற்றும் மதகுகளுக்கு அடியில் உள்ள அடைப்புகளை அகற்றுதல், பழைய மற்றும் பாழடைந்த கட்டடங்களை அடையாளம் கண்டு பயன்படுத்துவதை தடை செய்தல், பலவீனமான மின்கம்பங்கள், மின்கம்பிகள் ஆகியவற்றை கண்டறிந்து அவைகளை மாற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பணிகளை அந்தந்த துறை சாா்ந்த அலுவலா்கள் செய்திட வேண்டும்.
மேலும், மீட்பு உபகரணங்களை திட்டமிட்டு முன்கூட்டியே தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். மேலும், பொதுமக்கள் பேரிடா் காலத்தில் கட்டணமில்லா தொலைபேசி எண்.1077 மற்றும் 04329-228709 என்ற தொலைபேசி எண்ணுக்கும், கட்ச்செவி (வாட்ஸ்ஆப்) 93840-56231 என்ற எண்ணுக்கும் பாதிப்புகள் குறித்து தகவல் அளிக்கலாம் என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா.மல்லிகா, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முத்தமிழ்செல்வன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆ.ரா.சிவராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.