Amaran 100: `முகுந்தை நிலையாகக் கொண்டுள்ள இந்துவின் உலகம்தான் அமரன்' -ராஜ்குமார்...
அருள் தரும் முருகன்
உறையூரைத் தலைநகராகக் கொண்டு, சோழர்கள் ஆண்டபோது வன விலங்குகளால் விவசாயப் பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டது. வயலூரில் விலங்குகளை சிலர் வேட்டையாடியபோது, தாகம் ஏற்பட்டது. அங்கு மூன்று கிளையாக இருந்த கரும்பை அவர்கள் ஒடித்தபோது ரத்தம் கசிந்தது. அதன் கீழே சிவலிங்கம் இருந்தது. பிற்காலத்தில் அங்கு சிறிய கோயில் அமைக்கப்பட்டது. அதுதான் வயலூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில். மூலவர் சுப்பிரமணிய சுவாமி. ஆதிநாதர். அம்மன் } வள்ளி தேவசேனா ஆதிநாயகி. தல விருட்சம் வன்னிமரம். சக்தி தீர்த்தம்.
உறையூரை ஆண்ட கேசரி வர்மன், ராஜேந்திர சோழன், முதலாம் ராஜ ராஜ சோழன் உள்ளிட்டோர் கோயிலுக்கு நிலம், பொன் கொடுத்ததும், விளக்கு எரிக்க மானியம் கொடுத்ததும் கல்வெட்டுகளில் பதிவாகியுள்ளன. பிற இடங்களில் தனித்து நிற்கும் முருகன் வயலூரில் தெய்வகுஞ்சரி, வள்ளியோடு இணைந்து அருள்பாலிக்கிறார்.
ஆதிநாதர், ஆதிநாயகியாகிய சிவன், பார்வதியை வணங்கியவுடன்தான் முருகனை வணங்க முடியும். ஆதிநாதர் சந்நிதியில் உள்ள சுந்தரதாண்டவமூர்த்தி விக்ரஹம் திருவாச்சி, காலின் கீழ் முயலகன்,சடாமுடி இல்லை. கிரீடம் மட்டும் உள்ளது. கால் தூக்காமல் நடனமாடும் காட்சிக்கு "சுந்தரத் தாண்டவம்' என்று பெயர்.
அருணகிரிநாதருக்கு அருள் தந்து திருப்புகழ் பாடும் திறன்
தந்தவர் பொய்யாக் கணபதி. அவர் கையில் மாங்கனியோ, மாதுளங்கனியோ உண்டு. கணபதி சந்நிதிக்கு அருகே அருணகிரிநாதருக்கு பீடம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்குப் பின்னர், மயில்மேல் அமர்ந்த நிலையில் முத்துக்குமாரசாமி சந்நிதி.
"திருமணம் ஆகாதவர்கள், முருகனுக்குத் திருமணம் நடத்துவதாக வேண்டினால் திருமணம் நடக்கிறது. நாக தோஷம் உள்ளவர்கள் செவ்வாயன்று திருக்குளத்தில் மூழ்கி முருகனைத் தரிசித்தால் திருமணத் தடை அகன்றுவிடுகிறது' என்பது ஐதீகம். குழந்தை வரம், ஆயுள் பலம், கல்வி, அறிவு, செல்வ விருத்திக்கு இத்தலத்து முருகனை வேண்டுகின்றனர்.
திருமுருக கிருபானந்த வாரியார் வயலூர் முருகன் கோயிலுக்குத் திருப்பணிக் குழுத் தலைவராக இருந்து செயல்பட்டார். இக்கோயில் கும்பாபிஷேகம் பிப்ரவரி 19}இல் நடைபெறவுள்ளது. திருச்சியிலிருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில் வயலூர் உள்ளது.
}ஆர்.வேல்முருகன்