டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 4 காசுகள் உயர்ந்து 85.64 ஆக முடிவு!
அஸ்ஸாமில் வெள்ளப்பெருக்கு: 741 கிராமங்கள் நீரில் மூழ்கின; 2.60 லட்சம் மக்கள் பாதிப்பு!
குவாஹாட்டி: வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 2.60 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 741 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. 6,311.16 ஹெக்டேர் விளைநிலங்கள் சேதமடைந்துள்ளன. 1.44 லட்சம் கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அஸ்ஸாமில் கடந்த 24 மணி நேரத்தில் மழைப்பொழிவு பதிவாகவில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நிலைமை மேம்பட்டுள்ளது.
திங்கள்கிழமை நிலவரப்படி, மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பல பகுதிகளிலும் பெருமளவில் நீர் வடிந்துவிட்ட போதிலும், குறிப்பாக 6 மாவட்டங்களில் 2.60 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஸ்ரீபூமி, ஹைலாகண்டி, காசார் ஆகிய பகுதிகள் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளன. 4 மாவட்டங்களில் 130 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சுமார் 25 ஆயிரம் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அஸ்ஸாம் மாநில பேரிடர் மேலாண்மை நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, காம்ரப் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளில் மேலும் 3 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்ஸாமில் இந்த ஓராண்டில் மட்டும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்புகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.