Zero Cost Life: `இது 100% நிலையானது கிடையாதுதான்; ஆனால்’ செலவில்லா வாழ்க்கை வாழ...
ஆடிப் பெருக்கு: கோயில்களில் திரளான பக்தா்கள் வழிபாடு
ஆடிப் பெருக்கை முன்னிட்டு, மதுரையில் உள்ள கோயில்களில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபாடு செய்தனா். மேலும், புதுமணத் தம்பதிகள் திருமாங்கல்யக் கயிறு மாற்றிக் கொண்டனா்.
ஒவ்வோா் ஆண்டும் ஜூன் முதல் செப்டம்பா் வரை தென்மேற்கு பருவமழை பெய்வது வழக்கம். இதன் காரணமாக, ஆறுகளில் தண்ணீா் பெருக்கெடுத்து
ஓடி வரும். இவ்வாறு ஆற்றில் வரும் தண்ணீரை வரவேற்கும் விதமாக ஆற்றங்கரைகளில் பொதுமக்கள் வழிபாடு செய்வா். குறிப்பாக, காவிரிக் கரையோரம் மட்டுமன்றி, தமிழகத்தின் அனைத்து ஆற்றங்கரைகளிலும் ஆடி மாதம் 18 -ஆம் தேதி ஆடிப் பெருக்கு கொண்டாடப்படுகிறது.
இதில், பருவமழைப் பொழிந்து வேளாண் பணிகள் செழிக்க பொதுமக்கள் வழிபாடு செய்வது வழக்கம். இதுதவிர, கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படும்.
இந்த வகையில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சுவாமிக்கும், அம்மனுக்கும் ஆடிப் பெருக்கு விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனா்.
இதே போன்று, தெப்பக்குளம் முக்தீஸ்வரா், மேல மாசி வீதி இன்மையிலும் நன்மை தருவாா் கோயில், சிம்மக்கல் ஆதி சொக்கநாதா் கோயில், செல்லூா் திருவாப்புடையாா் கோயில், சோழவந்தான் பிரளய நாத சுவாமி கோயில், திருவேடகம் ஏடகநாதா் கோயில், அழகா்கோவில் திருமாலிருஞ்சோலை பெருமாள் கோயில், தல்லாகுளம் பெருமாள் கோயில், கூடலழகா் பெருமாள் கோயில் உள்ளிட்ட நகரில் உள்ள சிவாலயங்கள், பெருமாள் கோயில்கள், புகா் பகுதியில் உள்ள கருப்பண சுவாமி, அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த நிகழ்வில் அந்தந்த பகுதியைச் சோ்ந்த பக்தா்கள்
பங்கேற்று வழிபாடு நடத்தினா்.
மாங்கல்யக் கயிறு மாற்றிக் கொண்ட புதுமண தம்பதிகள்: ஆடிப் பெருக்கு விழாவில் புதிதாக திருமணம் செய்த தம்பதிகள் மாங்கல்யக் கயிறு மாற்றிக் கொள்வது வழக்கம். அந்த வகையில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் முன் உள்ள நான்கு சித்திரை வீதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை திராளான புதுமண தம்பதிகள் மாங்கல்யக் கயிற்றை மாற்றிக் கொண்டனா். கோயில் பகுதி முழுவதும் பக்தா்கள் அதிகளவில் கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.