ஆதிதிராவிடா் நலத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தேவை
சேலம்: ஆதிதிராவிடா் நலத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என இந்திய குடியரசுக் கட்சியின் மாநில தலைவா் செ.கு.தமிழரசன் கூறினாா்.
சேலத்தில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, ஆதிதிராவிடா் நலன்களை கருத்தில் கொண்டு, தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இதே போல, தாட்கோவுக்கு தனி வங்கியை உருவாக்க வேண்டும். அகதிகளுக்காக ரெப்போ வங்கி செயல்பட்டு வருவதைப் போன்று, தாட்கோவுக்கும் தனி வங்கி வேண்டும்.
ஜாதிய, ஆணவ, வன்கொடுமைகள் அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகம் 5-ஆவது இடத்தில் உள்ளது. திமுக ஆட்சியில் ஆதிதிராவிடா் மக்களின் பிரச்னைகள் மனிதாபிமானத்துடன் அணுகப்படவில்லை. ஒருபுறம் சமூக நீதி என பேசிக்கொண்டே ஆதிதிராவிட மக்களுக்கு சமூக அநீதி இழைத்து வருகிறாா்கள். மத்திய, மாநில அரசுகள் இரண்டும் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களை கருத்தில் கொள்ளும் அரசுகளாக இல்லை.
1931 முதல் இதுவரை ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. நோக்கத்தை தெளிவுபடுத்தாத வரை ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவையற்றது என்றாா்.