`ஆவினில் வேலை' ரூ.3கோடி மோசடி வழக்கு - ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தா...
திருச்செந்தூர்: கடலில் வீசப்படும் துணிகள்; நீராடும் பக்தர்களுக்கு ஏற்படும் இடையூறு!
பாவத்தை போக்கும் இடம் பாபநாசம் என்கிறாரகள். அதன் காரணமாக பரிகாரம் செய்ய வருபவர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. அதற்காக வருபவர்கள் அவரவர் தன்மைக்கேற்ப யாகமோ, தர்ப்பணமோ செய்து விட்டு நதியில் தலைமுழுகிவிட்டுச் செல்வது வழக்கம். ஆனால் பரிகாரம் செய்துவிட்டு குளித்த அதே ஆடையுடன் வீட்டிற்குச் சென்றால் அது பாவம் என்ற எண்ணத்தில், அந்த ஈரத் துணிகளை அப்படியே ஆற்றில் விட்டு விட்டுக் கிளம்பிவிடுகிறார்கள்.

இப்படிப் பரிகாரத்திற்காக வருபவர்கள் தங்களின் ஆடைகளை அப்படியே ஆற்றில் விடுவதால் அது பிற பகுதிகளில் குளிக்கும் மக்களின் கால்களில் சிக்கி சில நேரங்களில் விபரீதங்களை ஏற்படுத்திவிடுகிறது. அப்படி விடப்படும் துணிகள் டன் கணக்கில் சேர்ந்து நதியை அசுத்தப்படுத்தவதுடன் நான்கு மாவட்ட மக்களின் குடிநீராகவும் பயன்படுவதால் அந்த மக்களுக்கு பலவிதமான நோய்களையும் உண்டாக்குகிறது என்பது அந்த பகுதிவாழ் மக்களின் நெடுங்காலக் குற்றச்சாட்டு.
திருச்செந்தூர்
பாபநாசத்தைப் போலவே சமீப காலமாக திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கடற்கரையில் பக்தர்களில் சிலர் புனித நீராடிய பின்னர், தாங்கள் உடுத்திருந்த ஆடைகளை அப்படியே கடலில் விட்டு விட்டு செல்கின்றனர். இந்த துணிகள் கடலில் மிதந்தவாறு அப்படியே கிடப்பதால் அங்கு நீராடக்கூடிய பிற பக்தர்களுக்கு ஒரு வித அசெளகரியத்தை ஏற்படுகிறது. பக்தர்களின் கால்களில் இந்த துணிகள் சிக்குகின்றன.

வயதானவர்களின் கால்களை இந்த பழைய துணிகள் சுற்றுவதால் அவர்கள் நீராடும்போது கால்கள் இடறி கீழே விழும் நிலை ஏற்படுகிறது. கடலுக்குள் உள்ள பாறைகளில் விழுந்து கால்களில் முறிவு ஏற்படும் அளவிற்கு அபாயம் ஏற்பட்டுள்ளது . இத்துணிகள் நீராடக் கூடிய பிற பக்தர்களுக்கும் அசெளகரியத்தை கொடுக்கிறது.
பொதுவாக ராமேஸ்வரம் போன்ற பகுதிகளில் பக்தர்கள் நீராடும்போது தங்களது பாவத்தை தொலைத்து விடுவதாக மனதில் கொண்டு தங்களது உடைகளை களைந்து அங்கே விட்டு விட்டு செல்கின்றனர். ஆனால், திருச்செந்தூர் ஒரு புண்ணிய ஸ்தலம் என்பதால் இங்கே வரக்கூடிய பக்தர்கள் அவ்வாறு செய்வது ஒரு தவறான செயலாகும் என்கிறார்கள் கோயில் நிர்வாகத்தினர். இது பற்றிய அறியாத பக்தர்கள் தவறான வழிநடத்தலின் காரணமாக தங்களது துணிகளை விட்டுவிட்டு செல்கின்றனர். இதன் காரணமாக இந்த கடல் பகுதியே குப்பைக்கூடமாக காட்சி அளிக்கிறது.

திருக்கோயில் ஊழியர்கள் மற்றும் கடற்கரை தூய்மைப் பணியாளர்கள் இந்த குப்பைகளை அவ்வப்போது அகற்றி வருகின்றனர். இருந்தபோதும் துணிகளை போடுவது தொடர்கதையாகி வருகிறது. அப்படி செய்வதாக இருந்தால் கூட அந்த துணிகளை கடற்கரை ஓரத்தில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளில் போட்டுவிட்டு செல்ல வேண்டுமே தவிர துணிகளை கழட்டி அப்படியே போட்டு விட்டு செல்லக்கூடாது என திருக்கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.