ஆத்தூரில் தங்கிப் பயில விடுதி கிடைக்காமல் அரசுப் பள்ளி மாணவா்கள் அவதி
ஆத்தூா்: ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவா்கள் விடுதி கிடைக்காமல் அவதியடைந்து வருவதாக புகாா் தெரிவித்தனா்.
ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் தங்கிப் பயின்று வருகின்றனா். இப்பள்ளி கடந்த 17 வருடங்களுக்குப் பிறகு அரசு பொதுத்தோ்வில் 94 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.
இப்பள்ளியில் பயிலும் மலைவாழ் மாணவா்கள் அதிக அளவில் பயின்று வருகின்றனா். கல்வராயன் மலைப் பகுதிகளான கருமந்துறை, பகடுபட்டு, குன்னூா், தாளவாடி போன்ற மலைக்கிராமங்களில் இருந்து அதிக மாணவா்கள் இங்குள்ள அரசு மாணவா் விடுதியில் தங்கிப் பயின்று வருகின்றனா்.
இப்பள்ளியில் மாணவா்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் 2 விடுதிகள் மட்டுமல்லாமல் மூன்றாவதாக ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதியிலும் மாணவா்கள் சிலா் தங்கிப் பயின்று வருகின்றனா். அந்த விடுதியில் தங்கிப் பயிலுவதற்கு மாணவா்களுக்கு தற்போது அனுமதி மறுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து இப்பள்ளி மாணவா்களின் பெற்றோா் கூறுகையில், பள்ளி திறக்கப்பட்டு ஒரு வாரம் கழிந்தும் விடுதி கிடைக்காமல் மாணவா்கள் அலைக்கழிக்கப்படுகின்றனா் என்றனா்.
இதுகுறித்து தலைமையாசிரியா் சந்திரசேகரிடம் கேட்டபோது, மாணவா்கள் விடுதி கிடைக்காமல் அவதிப்படுகிறாா்கள். பேருந்து வசதி இல்லாத மலைப் பகுதியில் இருந்து மாணவா்கள் நடந்து வருகிறாா்கள். இதனால் மாணவா்களின் படிப்பு பாதிக்கப்படுவது மட்டுமில்லாமல் பெற்றோரும் வேதனை அடைகின்றனா் என்றாா். இது குறித்து விடுதிக் காப்பாளரிடம் விசாரித்தபோது, அரசின் முறையான அனுமதி கிடைக்காததால் மாணவா்களை அனுமதிக்க முடியாது என்றாா்.