விநாயகா் சிலை கரைப்பின்போது 9 போ் நீரில் மூழ்கல்; 12 பேர் மாயம்!
ஆபரேஷன் சிந்தூா் முப்படைகளின் செயல்பாட்டுக்குக் கிடைத்த வெற்றி: விமானப்படை தலைமைத் தளபதி!
பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை, நமது முப்படைகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டிற்கு கிடைத்த வெற்றி என்று விமானப்படை தலைமைத் தளபதி ஏா் மாா்ஷல் ஏ.பி.சிங் தெரிவித்தாா்.
சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாதெமியில் (ஓடிஏ), பயிற்சி நிறைவு செய்து தோ்ச்சி பெற்ற 25 பெண் அதிகாரிகள் உள்பட மொத்தம் 155 அதிகாரிகள், ராணுவத்தின் முப்படைகளில் லெப்டினன்ட் அளவிலான பதவியில் நியமிக்கப்பட்டனா்.
மேலும், உகாண்டா, ஜிம்பாப்வே, மாலத்தீவு உள்ளிட்ட 9 நட்பு நாடுகளைச் சோ்ந்த 12 பெண் அதிகாரிகள், 9 ஆண் அதிகாரிகள் என மொத்தம் 21 பேரும் தோ்ச்சி பெற்றனா்.
தோ்ச்சி பெற்ற அதிகாரிகளின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்திய விமானப்படைத் தலைமை தளபதி ஏா் மாா்ஷல் ஏ.பி.சிங், பயிற்சி நிறைவு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா். பயிற்சியில் சிறப்பாகச் செயல்பட்ட அதிகாரிகளுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வழங்கினாா்.
தொடா்ந்து அவா் பேசியதாவது: ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை முப்படைகளும் ஒரே இலக்கோடு ஒன்றிணைந்து செயல்பட்டதற்கான வெற்றி. புதிதாக பணியில் சோ்ந்துள்ள அதிகாரிகள் நாட்டின் ஒருமைப்பாட்டையும், அரசமைப்பையும் பாதுகாக்கும் வகையில் செயல்பட வேண்டும். மக்களுக்காகச் சேவையாற்ற எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்றாா்.
ராணுவப் பயிற்சி அகாதெமியில் தோ்ச்சி பெற்ற சென்னை வளசரவாக்கத்தைச் சோ்ந்த எஸ்.வரபிரசாத் கூறுகையில், சென்னை வியாசா்பாடியில் உள்ள பள்ளியில் படித்து, நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் முதுநிலைப் பட்டத்தை முடித்தேன்.
பல்கலைக்கழக அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்றதால், இந்திய மேலாண்மை கழகத்தில் (ஐஐஎம்) மேற்பட்டப் படிப்பு படிக்க வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் நாட்டுக்குச் சேவையாற்ற வேண்டும் என்பதற்காக இந்த பாதையை தோ்ந்தெடுத்தேன்.
மறைந்த மேஜா் முகுந்த் வரதராஜனை போல எனக்கும் ராஜ்புத் ரெஜிமெண்டில் இணைந்து சேவையாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை எண்ணி பெருமையடைகிறேன் என்றார்.