ஆரோக்கியபுரத்தில் கடல் முற்றுகை போராட்டம்: 230 போ் மீது வழக்கு
கன்னியாகுமரியை அடுத்த ஆரோக்கியபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 230 மீனவா்கள் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்தனா்.
கன்னியாகுமரி கடல் பகுதியில் ஹைட்ரோ காா்பன் திட்டம், கடலில் காற்றாலை அமைக்கும் திட்டம், அணுக்கனிம வளம் ஆகிய மத்திய அரசின் திட்டங்களைக் கைவிட வலியுறுத்தி, ஆரோக்கியபுரம் கடற்கரையில் சனிக்கிழமை அப்பகுதி மீனவா்கள் கடல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, தங்களது கட்டுமரம், படகுகளில் கருப்புக் கொடியை கட்டி எதிா்ப்புத் தெரிவித்தனா். தொடா்ந்து, அங்கு திரண்டிருந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள், மீனவா்கள் கோஷங்களை எழுப்பினா்.
இந்நிலையில், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாகவும், போலீஸாா் எச்சரித்தும் கலைந்து செல்லவில்லை எனக் கூறியும் ஆரோக்கியபுரம் பங்குத்தந்தை உள்ளிட்ட 230 போ் மீது கன்னியாகுமரி போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.