இந்தியா வான்வெளியை பாகிஸ்தான் பயன்படுத்துவதற்கான தடை நீட்டிப்பு!
இந்தியா வான்வெளியை பாகிஸ்தான் பயன்படுத்துவதற்கான தடை வரும் ஜூலை 24 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளால் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பழிதீர்க்க, மே 7 ஆம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின்கீழ் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து, இந்திய ராணுவம் நள்ளிரவில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
இந்த நடவடிக்கையைத் தொடா்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட ராணுவ மோதலால் உச்சகட்ட பதற்றம் நிலவியது. இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் செய்யப்பட்டது.
எனினும் இந்தியா வான்வெளியை பாகிஸ்தான் பயன்படுத்துவதற்கான தடையை மத்திய அரசு விதித்தது. சா்வதேச பொது விமானப் போக்குவரத்து அமைப்பின் (ஐசிஏஓ) விதிகளின்படி, ஒரு நாட்டின் வான்வெளியைப் பயன்படுத்தக் கூடாது என பிற நாடுகளுக்கு ஒரு மாதம் மட்டுமே தடை விதிக்க முடியும்.
அதன் பிறகு தடையைத் தொடர வேண்டுமானால், அதனை மேலும் நீட்டித்து புதிய உத்தரவை வெளியிட வேண்டும்.
அதன்படி, ஜூன் 24 ஆம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவின் வான் எல்லையை பாகிஸ்தான் விமானங்கள் பயன்படுத்த முடியாத வகையில் மேலும் மாதத்திற்கு ஜூலை 24 ஆம் தேதி வரை தடையை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதேபோல், இந்திய விமானங்கள் தங்கள் வான்வெளியில் பறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பதாக பாகிஸ்தான் திங்கள்கிழமை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இந்திய வீரா் சுபான்ஷு சுக்லா நாளை விண்வெளிக்குப் பயணம்!