விழுப்புரம் - புதுச்சேரி பயணிகள் ரயில்கள் 4 நாள்களுக்கு முழுமையாக ரத்து!
திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், விழுப்புரம் - புதுச்சேரி பயணிகள் ரயில்கள் 4 நாள்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் முழுமையாக ரத்து மற்றும் நிறுத்தி வைத்து இயக்கம் போன்றவை செயல்படுத்தப்படவுள்ளன.
விழுப்புரத்திலிருந்து காலை 5.25 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் -புதுச்சேரி பயணிகள் ரயில் (வண்டி எண் 66063), புதுச்சேரியிலிருந்து காலை 8.05 மணிக்குப் புறப்படும் புதுச்சேரி -விழுப்புரம் பயணிகள் ரயில் (வண்டி எண் 66064) ஆகிய இரு ரயில்களும் ஜூன் 26,27,28, 30 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை எழும்பூரிலிருந்து காலை 6.35 மணிக்குப் புறப்படும் எழும்பூர் -புதுச்சேரி பயணிகள் ரயில் (வண்டி எண் 66051), ஜூன் 29-ஆம் தேதி மட்டும் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமார் 60 நிமிஷங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் இயக்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | இஸ்ரேல் - ஈரான் போர்நிறுத்தம் நீடிக்குமா எனத் தெரியவில்லை: ரஷியா கருத்து