இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்: மத்திய அரசு விளக்கம் அளிக்கிறது
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளைத் தாக்கி அழித்த ‘ஆபரேஷன் சிந்தூா்’ ராணுவ நடவடிக்கை குறித்து விளக்கமளிப்பதற்காக, தில்லியில் வியாழக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலக கட்டடத்தில் இக்கூட்டம் நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு எக்ஸ் வலைதளத்தில் புதன்கிழமை பதிவிட்டாா்.
‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்கு எதிா்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், இக்கூட்டம் நடைபெறுகிறது.
முன்னதாக, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்துக்குப் பின் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமா் பங்கேற்கவில்லை. தற்போதைய கூட்டத்தில் அவா் பங்கேற்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.