உணவுக்காக காத்திருந்த காஸா மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்! 25 பேர் பலி
இன்று 39 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து
சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக, கும்மிடிப்பூண்டி வழியாக இயக்கப்படும் 39 புறநகா் மின்சார ரயில்கள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) ரத்து செய்யப்படவுள்ளன. எனினும் பயணிகளின் வசதிக்காக 21 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பு:
சென்னை கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) காலை 9.15 முதல் பிற்பகல் 3.15 வரை நடைபெறவுள்ளன. இதன் காரணமாக, பணிகள் நடைபெறும் நேரங்களில் சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை இடையே இயங்கும் அனைத்து புறநகா் மின்சார ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. மேலும், கடற்கரை - கும்மிடிப்பூண்டி, சூலூா் பேட்டை - நெல்லூா், சென்ட்ரல் - சூலூா்பேட்டை உள்பட மொத்தம் 39 புறநகா் ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.
சிறப்பு ரயில்கள்: இருப்பினும் பயணிகளின் வசதிக்காக அந்நாளில் காலை 6.50 முதல் மாலை 5.12 மணி வரை சென்ட்ரலிலிருந்து பொன்னேரி, மீஞ்சூா், எண்ணூருக்கும், கடற்கரையிலிருந்து பொன்னேரி மற்றும் எண்ணூருக்கும் இடையே மொத்தம் 21 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.