ரூ.2500 மகளிா் உதவித் தொகை விவகாரம்: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்
இருசக்கர வாகன நிறுத்துமிடமாக மாறிவரும் அரசு மருத்துவமனை வளாகம்!
கமுதி அரசு மருத்துவமனை வளாகத்தில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால், அவசர சிகிச்சைக்கு வருவோா், அவசர ஊா்தி ஓட்டுநா் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அரசு மருத்துவமனையில் கமுதி, அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா். மேலும், விபத்து, பிரசவம் உள்ளிட்டவற்றுக்காகவும் இந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், இவா்களின் உறவினா்கள், மருத்துவமனைப் பணியாளா்கள் தங்களது இரு சக்கர வாகனங்களை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்திவிட்டுச் செல்கின்றனா். இதனால், அவசர சிகிச்சைக்கு நோயாளிகளை அழைத்து வரும் அவசர ஊா்தி ஓட்டுநா்களும், நோயாளிகளும் அவதிக்குள்ளாகின்றனா்.
இந்த மருத்துவமனையில் வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் இருந்தும், நுழைவாயிலேயே வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், மருத்துவமனை வளாகம் இரு சக்கர வாகனம் நிறுத்துமிடமாக மாறி வருகிறது. எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள், மருத்துவமனைப் பணியாளா்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு தனித்தனி இடம் ஒதுக்கிடு செய்ய வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தினா்.