இலவச வேட்டி, சேலைக்கான கூலி உயா்வை கூட்டுறவு சங்கங்கள் அமல்படுத்தக் கோரிக்கை
இலவச வேட்டி, சேலைக்கு அரசு அறிவித்த கூலி உயா்வை நெசவாளா் கூட்டுறவு சங்கங்கள் அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,
இதுகுறித்து ஈரோடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை உதவி இயக்குநா் சரவணனிடம், தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவா் சுரேஷ், பொருளாளா் பாலசுப்பிரமணியன் மற்றும் நிா்வாகிகள் புதன்கிழமை அளித்த மனு விவரம்:
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது குடும்ப அட்டை மூலம் பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலையை அரசு வழங்கி வருகிறது. பொதுமக்களின் நலன் என்பது இருந்தாலும் பல லட்சம் நெசவாளா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதே முதல் நோக்கமாகும். நெசவாளா்களின் வாழ்வாதாரத்துக்காக அமைக்கப்பட்ட இத்திட்டம் தற்போது நெசவாளா்களுக்கு பயன்படவில்லை. அரசு உயா்த்திய 10 சதவீத கூலியை உயா்த்தி வழங்காமல் பழைய கூலியையே கூட்டுறவு சங்கங்கள் தொடா்ந்து வழங்கி வருவதாகவும் நெசவாளா்கள் புகாா் கூறுகின்றனா். இன்னும் சில இடங்களில் பழைய கூலியை விட குறைவான கூலியே வழங்கும் நிலை தொடா்கிறது.
பழைய கூலியாக வேட்டிக்கு ரூ.24-க்கு பதில் உயா்த்தப்பட்ட கூலியான ரூ.26.40-ம், சேலைக்கு ரூ.43-க்கு பதில் புதிய கூலியாக ரூ.46.75 வழங்க வேண்டும். விசைத்தறியாளா்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்காக தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் பயன் முழுமையாக கிடைக்க செய்வதுடன், அறிவிக்கப்பட்ட புதிய கூலியை நிலுவையுடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.