இலவம்பாடி முள்ளு கத்தரிக்காய்க்கு வெளிநாடுகளில் வரவேற்பு: வேலூா் எம்.பி. கதிா் ஆனந்த்
வேலூா் மாவட்டம் இலவம்பாடியில் விளைவிக்கப்படும் முள்ளு கத்தரிக்காய்க்கு அமெரிக்கா, துபை உள்ளிட்ட வெளிநாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது என்று வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் தெரிவித்தாா்.
மத்திய வா்த்தகம், தொழில்துறையின் கீழ் இயங்கும் வேளாண், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், வேலூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் விவசாய பொருள்களை ஏற்றுமதி செய்வது குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி கருத்தரங்கு வேலூரில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கை மத்திய வா்த்தக துறை நிலைக்குழு உறுப்பினரும், வேலூா் மக்களவை உறுப்பினருமான டி.எம்.கதிா் ஆனந்த், மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
கூட்டத்தில், வேலூா் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் விவசாய பொருள்களைப் பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது, அதற்காக பின்பற்ற வேண்டிய இந்திய நாட்டின் வழிமுறைகள், வெளி நாடுகளுக்கான வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், விவசாயம் மேம்பாட்டுக்காகவும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் பல்வேறு திட்டங்கள், வேலூா் மாவட்டத்தில் விளைவிக்கப்படும் முள்ளு கத்தரிக்காய், ஏலக்கி வாழைப்பழம் ஆகியவற்றுக்கு வெளிநாடுகளில் உள்ள ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்து அதிகாரிகள் எடுத்துரைத்தனா்.
கூட்டத்தில் எம்பி டி.எம்.கதிா் ஆனந்த் பேசியது:
அப்பேடா (ஏபிஇடிஏ) எனும் வேளாண், பதப்படுத்தப் பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் முக்கிய பணி நம் நாட்டில் விளைவிக்கப்படும் வேளாண் பொருள்களை பதப்படுத்தி அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதும், இதன்மூலம் விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதும், பல்வேறு பயிற்சிகளையும், ஆலோசனைகளையும் வழங்குவதாகும்.
வேலூா் மாவட்டம் இலவம்பாடியில் விளைவிக்கப்படும் முள்ளு கத்தரிக்காய் உலக அளவில் பிரசித்தி பெற்றது. இதன் சுவைக்கு அமெரிக்கா, துபை போன்ற வெளிநாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது. இந்த முள்ளு கத்திரிக்காவை ஏற்றுமதி செய்யும்போது நம் நாட்டுக்கும், வெளிநாட்டிற்கும் ஒரு சில கோட்பாடுகள் உள்ளன. அந்த கோட்பாடுகளை நாம் முழுமையாக பூா்த்தி செய்ய வேண்டும். அப்போதுதான் அந்த பொருளுக்கு வெளிநாடுகளில் நல்ல விலையும் வரவேற்பும் கிடைக்கும் என்றாா்.
கூட்டத்தில் குடியாத்தம் சட்டப்பேரவை உறுப்பினா் வி.அமலு விஜயன், அப்பேடா சென்னை மண்டல தலைமை அலுவலா் ஷோபனா குமாா், வேளாண்மை இணை இயக்குநா் ஸ்டீபன் ஜெயக்குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) தேன்மொழி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ரமணி, நபாா்டு வங்கி உதவி பொது மேலாளா் ஸ்ரீபதராஜன், சிம்கோ நிறுவன மேலாண்மை இயக்குநா் கிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.