இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானியும் எழுத்தாளருமான நெல்லை சு.முத்து காலமானார்
அறிவியல், சிறுவர் இலக்கியம், கவிதை, வரலாறு என 70-க்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ள விஞ்ஞானி நெல்லை சு.முத்து திருவனந்தபுரத்தில் உடல்நலக்குறைவால் காலமானார்.
1951-ம் ஆண்டு மே 10-ம் தேதி நெல்லையைச் சேர்ந்த சுப்பிரமணியம் - சொர்ணத்தம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர், நெல்லை சு.முத்து.
இளம் வயதிலேயே அறிவியல் மீது ஆர்வம் கொண்டிருந்த அவர், வேதியியல் பாடத்தை முதன்மையாகக் கற்றார். பின்னர் இஸ்ரோ மையத்தின் ஸ்ரீ ஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் முதல்நிலை விஞ்ஞானியாகப் பணியாற்றினார். அப்போது அங்குப் பணியாற்றிய அப்துல் கலாமுடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது.

முன்னாள் குடியரசுத் தலைவரும் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானியுமான மறைந்த அப்துல் கலாமால், "என்னைப் போன்றே சிந்திக்கக் கூடியவர், நெல்லை சு.முத்து" என்று பாராட்டப்பட்டவர்.
இஸ்ரோ விண்வெளி மையத்தில் பணியாற்றியபோதிலும் தமிழ் மீது தீராக் காதல் கொண்டவர். குறிப்பாக, சங்க இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்டவர். இவர் அறிவியல், சிறுவர் இலக்கியம், கவிதை, வரலாறு, மொழிபெயர்ப்பு, திறனாய்வு என 70-க்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். அறிவியல், விண்வெளி தொடர்பாக இவர் எழுதிய கட்டுரைகளும் புத்தகங்களும் பெரும் பாராட்டையும் பெற்றுள்ளன.
இவரின் 4 புத்தகங்களுக்குத் தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் விருது கிடைத்துள்ளது. 2000 ஆண்டில் இவர் எழுதிய 'விண்வெளி 2057' என்னும் நூலுக்கு அந்த ஆண்டுக்கான கணிதவியல், வானியல், இயற்பியல், வேதியல் வகைப்பாட்டில் பரிசு கிடைத்தது.
2004-ம் ஆண்டில் சிறுவர் இலக்கியத்துக்கான விருதை அவர் எழுதிய 'அறிவூட்டும் விஞ்ஞான விளையாட்டு' எனும் நூல் பெற்றது.
2005-ம் ஆண்டில், "ஐன்ஸ்டீனும் அண்டவெளியும்" என்கிற அவரது நூலுக்கு தன் வரலாறு என்ற வகைப்பாட்டில் விருது கிடைத்தது. 2010-ம் ஆண்டில் மூன்று பாகங்கள் கொண்ட "அறிவியல் வரலாறு" என்ற நூலுக்குத் தமிழக அரசின் விருது கிடைத்தது.

அத்துடன், "செவ்வாயில் உள்வேட்கையும் நல்வாய்ப்பும்" என்ற தலைப்பில் செவ்வாயைப் பற்றிய கிரேக்க இதிகாச, புராணக்கதைகள் மற்றும் நவீன விஞ்ஞான வாய்ப்புகளைக் கொண்டு எழுதப்பட்ட நூல் பெரும் பாராட்டைப் பெற்றது.
முதுநிலை விஞ்ஞானியாகப் பணியாற்றிய நெல்லை சு.முத்துவைப் பாராட்டும் வகையில் மலேசிய உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை சார்பாகக் கவிமாமணி விருது வழங்கப்பட்டது.
அறிவியல் தொடர்பாக எழுதியும் பேசியும் வந்த அவர், திருவனந்தபுரம், சென்னை நகரங்களில் வசித்து வந்தார். அவருக்குத் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் திருவனந்தபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவருக்கு மரகதம் என்ற மனைவியும், பாலசுப்பிரமணியன் என்ற மகனும், கலைவாணி என்ற மகளும் உள்ளனர். மதுரையில் உள்ள மகள் கலைவாணி வீட்டுக்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.