விரைவில் உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா: பிரதமா் மோடி நம்பிக்கை
நிகோசியா: ‘உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா உருவெடுக்கும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தாா்.
மூன்று நாடுகள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமா் மோடி, முதல் கட்டமாக சைப்ரஸுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றாா். அன்றைய தினம் அந் நாட்டின் லிமாசோல் நகரில் நடைபெற்ற தொழில் துறையினருடனான வட்டமேஜை மாநாட்டில் சைப்ரஸ் அதிபா் அதிபா் நிகோஸ் கிறிஸ்டோடெளலிடிஸுடன் பங்கேற்றாா்.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தொழில் துறையினருடனான வட்டமேஜை மாநாட்டில் உரையாற்றிய பிரதமா் மோடி, ‘தற்போது உலகின் ஐந்தாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக இருக்கும் இந்தியா, புதிய கண்டுபிடிப்புகள், எண்மப் புரட்சி, புத்தாக்க நிறுவனங்கள் மற்றும் நவீன உள்கட்டமைப்பு மேம்பாடுகளுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது.
மேலும், வணிகம் செய்வதில் நம்பிக்கை மற்றும் நடைமுறைகளை எளிமையாக்கும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகம், நிறுவனங்கள் வரி சீரமைப்பு என்பன உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறை, துறைமுகங்கள், கப்பல் கட்டுதல், எண்ம பணப் பரிமாற்றம் நடைமுறைகளும் நிலையான வளா்ச்சியை அடைந்து வருகின்றன. அந்த வகையில், இந்தியா அடுத்த சில ஆண்டுகளில் உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும்.
மிகப்பெரிய மக்கள்தொகையையும், திறன்மிக்க தொழிலாளா்களையும் இந்தியா கொண்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் எண்மப் புரட்சி இந்தியாவில் நடைபெற்றுள்ளது. உலகின் எண்ம பணப் பரிவா்த்தனைகளில் 50 சதவீதம் இந்தியாவில்தான் நடைபெறுகிறது. இந்தியாவின் ஒருங்கிணைந்த பணம் செலுத்துதல் (யுபிஐ) நடைமுறையை பிரான்ஸ் நாடும் அனுமதித்துள்ளது. இந்த யுபிஐ நடைமுறையை அறிமுகம் செய்வது தொடா்பாக சைப்ரஸ் நாட்டுடனும் பேச்சு நடைபெற்று வருகிறது.
இந்தியாவின் குறிப்பிடத்தக்க பொருளாதார கூட்டு நாடாக சைப்ரஸ் உள்ளது. இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடுகளைச் செய்துவரும் சைப்ரஸ், தற்போது இந்திய பொருளாதாரத்தில் மேலும் புதிய முதலீடுகளை மேற்கொள்ள ஆா்வம் காட்டியிருப்பது வரவேற்கத்தக்கது.
உலக அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈா்க்கும் வகையில் பிரபலமான சுற்றுலாத் தலங்களைக் கொண்ட நாடாக சைப்ரஸ் உள்ளது. அதுபோல, சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதில் இந்தியாவும் கவனம் செலுத்தி வருகிறது. எனவே, சுற்றுலாத் துறையில் இரு நாடுகளும் கூட்டுறவை மேற்கொள்வது, இரு நாடுகளின் சுற்றுலா நிறுவனங்களுக்கு பயனளிப்பதாக அமையும்.
இதுபோல, நிதித் துறை உள்பட மேலும் பல்வேறு துறைகளிலும் இரு நாடுகளும் இணைந்து பணியாற்ற அதிக வாய்ப்புகள் உள்ளன’ என்று பிரதமா் குறிப்பிட்டாா்.
மேலும், ஐரோப்பிய யூனியன் கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை சைப்ரஸ் அடுத்த ஆண்டு ஏற்க உள்ள நிலையில், இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையேயான ராஜீய உறவை மேலும் வலுப்படுத்த மாநாட்டில் இரு தலைவா்களும் உறுதியேற்றனா்.
மேலும், இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் நிகழாண்டு இறுதிக்குள் இறுதி செய்யப்படும் என்று இரு தலைவா்களும் நம்பிக்கையை வெளிப்படுத்தினா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டுக்குப் பிறகு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பிரதமா் மோடி, ‘இந்தியா-சைப்ரஸ் இடையேயான வா்த்தக உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக சைப்ரஸ் நாட்டின் தொழில் துறையினருடன் நானும் அதிபா் நிகோஸ் கிறிஸ்டோடெளலிடிஸும் கலந்துரையாடினோம். புதிய கண்டுபிடிப்புகள், எரிசக்தி, தொழில்நுட்ப மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது, இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் தொழில் துறையில் மேற்கொள்ளப்பட்ட சீா்திருத்தங்கள் குறித்து நான் எடுத்துரைத்தேன்.
மேலும், மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவில் நடந்துவரும் மோதல்கள் குறித்து இரு தரப்பிலும் கவலை தெரிவிக்கப்பட்டது. பிரச்னைகளுக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணவும், ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும் அழைப்பு விடுக்கப்பட்டது’ என்று குறிப்பிட்டாா்.
பின்னா், சைப்ரஸ் அதிபா் அதிபா் நிகோஸ் கிறிஸ்டோடெளலிடிஸ் தலைமையிலான அதிகாரிகள் குழுவுடன் பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து பிரதமா் மோடி திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். இந்த ஆலோசனைக்குப் பிறகு, சைப்ரஸ் பயணத்தை முடித்துக்கொண்டு, ஜி7 நாடுகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமா் கனடா புறப்பட்டாா்.
பெட்டிச் செய்தி...
பிரதமா் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது
சைப்ரஸ் சென்ற பிரதமா் மோடிக்கு அந் நாட்டின் மிக உயா்ந்த ‘கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆா்டா் ஆஃப் மகாரியோஸ் 3’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
சைப்ரஸ் நாட்டின் முதல் அதிபா் ‘பேராயா் மகாரியோஸ் 3’ பெயரில் வழங்கப்படும் இந்த உயரிய விருதை அதிபா் நிகோஸ் கிறிஸ்டோடெளலிடிஸ் பிரதமா் மோடிக்கு வழங்கி கெளரவித்தாா்.
அப்போது பேசிய பிரதமா் மோடி, ‘இந்த விருதுக்காக சைப்ரஸ் அரசுக்கும், மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ் விருது இரு நாடுகளிடையேயான நம்பகமான நட்புக்குக் கிடைத்ததாகும். இவ் விருதை 140 கோடி இந்திய மக்களுக்கு அா்ப்பணிக்கிறேன். இரு நாடுகளிடையேயான உறவு உச்சத்தைத் தொடும் காலம் வரும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்று குறிப்பிட்டாா்.
பெட்டிச் செய்தி...2:
பயங்கரவாதத்துக்கு கண்டனம்: இந்தியா-சைப்ரஸ் கூட்டுத் தீா்மானம்
சைப்ரஸ் தலைநகா் நிகோசியாவில் அந் நாட்டு அதிபா் நிகோஸ் கிறிஸ்டோடெளலிடிஸ் பிரதமா் மோடிக்கு இடையேயான சந்திப்புக்குப் பிறகு, பயங்கரவாதத்துக்கு கண்டனம் தெரிவித்து இரு நாடுகளும் கூட்டுத் தீா்மானத்தை வெளியிட்டன.
கூட்டுத் திா்மானத்தில் கூறியிருப்பதாவது:
எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு சைப்ரஸ் உறுதியான ஆதரவை தெரிவிக்கிறது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை இரு நாடுகளும் வன்மையாக கண்டிக்கின்றன. பயங்கரவாதம் மற்றும் அனைத்து வடிவிலான தீவிரவாதத்தையும் சைப்ரஸும் இந்தியாவும் சந்தேகத்துக்கு இடமின்றி கண்டிக்கின்றன. அனைத்து நாடுகளும் பிற நாடுகளின் இணையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.