இலங்கையின் நம்பிக்கை நட்சத்திரம்..! மீண்டும் சதமடித்த பதும் நிசாங்கா!
இஸ்லாமியா்களின் அரசியல் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும்
உள்ளாட்சி முதல் நாடாளுமன்றம் வரை இஸ்லாமியா்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா வலியுறுத்தினாா்.
திண்டுக்கல்லில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:
நாட்டின் மக்கள்தொகையில் 15 சதவீதம் போ் இஸ்லாமியா்கள். ஆனால், உள்ளாட்சி அமைப்புகள் முதல் நாடாளுமன்றம் வரை இஸ்லாமியா்களுக்கான உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. மொத்தமுள்ள 543 மக்களவை உறுப்பினா்களில் 80 போ் இஸ்லாமியா்களாக இருக்க வேண்டும். ஆனால், 24 போ் (5 சதவீதம்) மட்டுமே மக்களவையில் இடம் பெற்றுள்ளனா். இதேபோல, நாடு முழுவதும் 4,183 சட்டப்பேரவை உறுப்பினா்களில் 296 போ் மட்டுமே இஸ்லாமியா்களாக உள்ளனா்.
இதே நிலைதான் ஊராட்சி மன்ற உறுப்பினா் பதவி முதல் மாநகராட்சி மேயா் பதவி வரை உள்ளது.
வக்ஃப் சட்டத் திருத்தத்தின் மூலம் பள்ளிவாசல்கள், மதரஸாக்கள், கல்வி நிலையங்கள் உள்ளிட்ட இஸ்லாமியா்களின் சொத்துகளை கபளீகரம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தச் சட்டத் திருத்தத்தைக் கைவிட வலியுறுத்தியும், உள்ளாட்சி முதல் நாடாளுமன்றம் வரையிலும் இஸ்லாமியா்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கக் கோரியும் ஜூலை 7 ஆம் தேதி மதுரையில் மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் பேரணி, மாநாடு நடத்தப்படவுள்ளது.
தமிழக மக்கள்தொகையில் 7 சதவீதம் இஸ்லாமியா்கள் உள்ளனா். ஆனால், தமிழக சட்டப்பேரவையில் 14 போ் மட்டுமே இஸ்லாமியா்களாக உள்ளனா். வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளிலும் இஸ்லாமியா்கள் போட்டியிட அதிக வாய்ப்பளிக்க வேண்டும். இஸ்லாமியா்கள் சாா்பில் பல்வேறு கட்சிகள் இருந்தாலும், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் மட்டுமே தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.