ஈரோடு கிழக்கு: 4 ஆண்டுகளில் 2-வது இடைத்தேர்தல்! வாக்களிக்காத 72 ஆயிரம் பேர்!!
ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் ஈரோடு சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்பட்டு வருகின்றன.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. இதில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் முன்னிலையில் உள்ளார். இந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் 78 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் இப்போது நடைபெற்றிருப்பது இரண்டாவது இடைத்தேர்தல் என்பதால், தேர்தலில் வாக்களிக்க பெரும்பாலானோர் ஆர்வம்காட்டவில்லை என்று கூறப்படுகிறது.
2021-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா வென்று எம்.எல்.ஏ.வானார். ஆனால், அவர் உடல்நலக் குறைவால் காலமானதைத் தொடர்ந்து 2023-ல் இடைத்தேர்தல் நடைபெற்றது.
அதில் திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு மாபெரும் வெற்றியைப் பதிவு செய்திருந்தார்.
ஆனால் எதிர்பாராதவிதமாக, ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் மறைந்ததால் மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனால், கடந்த 4 ஆண்டுகளில் 2-வது இடைத்தேர்தலை ஈரோடு கிழக்கில் எதிர்கொண்டுள்ளது.
ஆர்வமில்லை..
இரண்டாவது முறை இடைத்தேர்தல் நடைபெறுவதால், வாக்காளர்கள் பெரும்பாலும் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இந்த இடைத்தேர்தலில் 1,54,657 பேர் வாக்களித்தனர்; 72,889 பேர் வாக்களிக்கவில்லை. அதாவது ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 67.97% வாக்குகள் பதிவாகி இருந்தன.