இந்தியா கூட்டணிக் கட்சியினர் ஈகோவைக் கைவிட வேண்டும்: திருமாவளவன்
தில்லி தேர்தல் முடிவுகளைக் கருத்தில்கொண்டு இந்தியா கூட்டணிக் கட்சியினர் ஈகோவைக் கைவிட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"பாஜக முன்னிலையில் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆம் ஆத்மி பின்னடைவைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
தில்லியில் பாஜக ஆட்சி அமையுமானால் அது தேசத்திற்கான பின்னடைவாகத்தான் பார்க்கப்படுகிறது. நியாயமான முறையில் தில்லி தேர்தல் நடந்திருக்குமா என்ற ஐயம் ஏற்பட்டிருக்கிறது.
இந்தியா கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை. காங்கிரஸ், ஆம் ஆத்மி ஒற்றுமையாக இந்த தேர்தலைச் சந்திக்கவில்லை. இந்தியா கூட்டணி தலைவர்கள் இதுகுறித்து தீவிரமாக கலந்தாய்வு செய்ய வேண்டும்.
இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் ஈகோ பிரச்னைகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு நாட்டையும் மக்களையும் காப்பாற்றுவதற்கான திசைவழியை சிந்திக்க வேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு மட்டுமின்றி சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கும் இந்தியா கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது. ஆகவே தில்லி தேர்தல் முடிவுகளை ஒரு படிப்பினையாகக் கொண்டு காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜவாதி உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் இதுகுறித்து சிந்திக்க வேண்டும்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் எதிர்பார்த்தவாறே திமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளது" என்றார்.
இதையும் படிக்க | தில்லி தேர்தல்: ஒரு தொகுதியில்கூட முன்னிலை பெறாத காங்கிரஸ்!
தில்லி தேர்தல் நிலவரம்
70 தொகுதிகள் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு புதன்கிழமை (பிப். 5) தோ்தல் நடைபெற்ற நிலையில், வாக்குகளை எண்ணும் பணி இன்று (சனிக்கிழமை) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
வாக்கு எண்ணிக்கையில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி இந்திய தேர்தல் ஆணையத் தரவுகளின்படி பாஜக - 48, ஆம் ஆத்மி - 22 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. காங்கிரஸ் ஒரு தொகுதியில்கூட முன்னிலையில் இல்லை.
தில்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில், நாடு முழுவதும் பாஜகவினர் இதனைக் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிக்க | கேஜரிவால், அதிஷி தொடர்ந்து பின்னடைவு! மணீஷ் சிசோடியா முன்னிலை!