Health: பாடி பாசிட்டிவிட்டி, பாடி நியூட்ராலிட்டி இரண்டில் எது சிறந்தது?
ஈஸ்டர் திருநாள்: தூத்துக்குடியில் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை!
தூத்துக்குடி: ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயம், திரு இருதய ஆலயம் உள்ளிட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
உலகம் முழுவதும் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3ஆம் நாள் உயிரோடு எழுந்ததை ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்துவர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இப்பண்டியின் தொடக்கமாக தவக்காலம் கடந்த மார்ச் 5ஆம் தேதி சாம்பல்புதனில் இருந்து தொடங்கியது.
தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை(ஏப்.17) புனித வியாழன் தினத்தில் இயேசு தனது சீடர்களின் பாதங்களைக் கழுவி அவர்களுக்கு திருவிருந்து வழங்கியதை நினைவு கூறும் வகையில் ஆயர், பங்குத்தந்தையர் ஆகியோர் 12 பேரின் பாதங்களைக் கழுவி அவர்களுக்கு புத்தாடை, மற்றும் ரொட்டி ஆகியவற்றை வழங்கினர்.

தொடர்ந்து இயேசு சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளியன்று (ஏப்.18) சிலுவை பாதை, மும்மணி தியான ஆராதனை ஆகியவை நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, இயேசு கிறிஸ்து 3ஆம் நாள் உயிர்த்தெழுந்ததை நினைவுகூறும் வகையில், ஈஸ்டர் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12 மணிக்கு ரோமன் கத்தோலிங்க தேவாலயங்களில் கொண்டாடப்பட்டது.
அதன்படி, தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தில், பேராலய அதிபரும் பங்குத்தந்தையுமான ஸ்டார்வின் தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து உலக அமைதி வேண்டி மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இதேப்போன்று, திரு இருதய ஆலயத்தில் ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையிலும், லூர்தம்மாள்புரம் லூர்து அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ஆன்றனி புருனோ தலைமையிலும் ஈஸ்டர் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.
மேலும், அந்தோணியார் ஆலயம், இன்னாசியர் ஆலயம் உள்பட கிறிஸ்துவ ஆலயங்களிலும் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. மேலும், தூத்துக்குடியில் உள்ள சிஎஸ்ஐ தேவாலயங்களில் அதிகாலையில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்துவர்கள் பங்கேற்றனர்.

இதையும் படிக்க: ஈஸ்டர் திருநாள்: பிரதமர் மோடி வாழ்த்து!