உக்ரைனில் ரஷியா இதுவரை இல்லாத தீவிர தாக்குதல்
உக்ரைனில் இதுவரை இல்லாத மிகப்பெரிய இரவு நேர ட்ரோன் தாக்குதலை ரஷியா நடத்தியுள்ளது. இதில் 479 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக உக்ரைன் விமானப் படை திங்கள்கிழமை தெரிவித்தது.
இது குறித்து அந்தப் பிராந்தியத்தைச் சோ்ந்த அதிகாரிகள் கூறியதாவது: உக்ரைனின் பல்வேறு பகுதிகளை நோக்கி பல்வேறு வகைகளைச் சோ்ந்த 20 ஏவுகணைகளும் ஏராளமான ட்ரோன்களும் ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் ஏவப்பட்டன. இதில் பெரும்பாலும் உக்ரைனின் மத்திய மற்றும் மேற்கு பகுதிகள் குறிவைக்கப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
உக்ரைன் வான் பாதுகாப்பு தளவாடங்கள் 277 ட்ரோன்களையும் 19 ஏவுகணைகளையும் சுட்டு வீழ்த்தியதாக விமானப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 10 ட்ரோன்கள், ஏவுகணைகள் மட்டுமே இலக்கை தாக்கியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இதை நடுநிலை ஊடகங்கள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.ரஷியா: இந்தத் தாக்குதல் குறித்து ரஷிய பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், உக்ரைன் இராணுவ இலக்குகளை மட்டுமே நோக்கி தாக்கப்பட்டதாக தெரிவித்தது. எனினும், இந்த தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அமைச்சகம் எதையும் தெளிவுபடுத்தவில்லை.
ரஷியாவின் வான்வழித் தாக்குதல்கள் பெரும்பாலும் இரவு தொடங்கி காலை வரை நீடிக்கின்றன. காரணம் இருளில் ட்ரோன்களை கண்டறிவது கடினம். மூன்று ஆண்டுகளுக்கும் மேலான இந்தப் போரில் உக்ரைனின் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாகித் ரக ட்ரோன்களால் ரஷியா தொடா்ந்து தாக்குதல் நடத்திவருகிறது.
இந்த தாக்குதல்களில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்திருப்பதாக என்று ஐ.நா. புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.ண்மைக் காலமாக உக்ரைனில் ரஷியா நடத்தும் தாக்குதல்களின் தீவிரம், இரு தரப்புகளும் விரைவில் சமாதான ஒப்பந்தத்தை எட்ட முடியாது எனும் அச்சத்தை மேலும் அதிகரித்துவருகிறது.
குறிப்பாக, ரஷியாவுக்குள் ஊடுருவி, அங்கு உள்ள விமான தளங்களை உக்ரைன் ட்ரோன்களால் தாக்கிய பின்னா் ரஷிய தாக்குதலின் தீவிரம் அதிகரித்துள்ளது.