கோயில் உண்டியலில் ரூ.3 கோடி வீட்டுச் சொத்து பத்திரங்கள் காணிக்கை: முன்னாள் ராணுவ...
உங்களுக்கு நல்ல மகனாகவே வாழ்ந்து மடிய வேண்டும்! - மகனின் நன்றி மடல் #உறவின்கடிதம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
அன்பான அம்மாவிற்கு,
என் உயிர்த்தாயே, எனக்கு உரு கொடுத்த உயிரே, என் நன்றியை ஒரு போதும் உங்களிடத்தில் தெரியப்படுத்தியதே கிடையாதே. அப்பாவிற்குக் கூட பிறந்த நாள் தெரியும். ஒவ்வொரு பிறந்த நாளன்றும் என் நன்றியறிதலை வெளிப்படுத்தியிருக்கிறேன். நீங்கள் உங்கள் பிறந்த நாளையே அறியாதிருந்தீர்கள். உங்களின் பிறந்த நாளைக் கொண்டாடும் வாய்ப்பினையும் எங்களுக்குக் கொடுத்ததில்லை. திருமண நாளன்று அப்பாவையும் உங்களையும் சேர்த்தே வணங்கியிருக்கிறேன்.
ஒருபோதும் எனைப் பாடுபட்டு வளர்த்தமைக்கான நன்றியை நான் உங்களிடம் வெளிப்படுத்தி அறியேன். நான் எனது ஐந்து வயதிலிருந்து என் நினைவில் நிற்பவற்றைக் கொண்டு உம் திருவடிகளை என் கண்ணீரால் கழுவுகிறேன்.
உங்களின் சிறுவயது லட்சியமே ஒரு நல்ல தாயாய், ஒரு நல்ல குடும்பத் தலைவியாய் வாழ்வதே என்பதை அடிக்கொரு தரம் நீங்கள் கூறியிருக்கிறீர்கள். உங்கள் வீட்டில் குடியிருந்து நல்வாழ்வு வாழ்ந்த ஒரு தாயை நீங்கள் அந்த இளம் வயதிலேயே முன்மாதிரியாய் கொண்டிருந்ததாக என்னிடம் தெரிவித்திருந்தீர்கள்.

எனக்குத் தொடக்கக்கல்வியை உரிய வயதில் அளிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டு ஒரு வயது முன்னதாகவே ஒன்றாம் வகுப்பில் சேர்த்துவிட்டீர்கள். இன்றும் அரசுப்பணியில் நான் 14 மாதம் முன்னதாகவே பணி ஓய்வு பெற்று விடுவேன். பிறந்த நாளை 14 மாதம் முன்னதாகக் கொடுத்து எனைப் படிக்க வைத்தீர்கள்.
10 வயது முதல் கல்லூரியில் படித்து முடிக்கும் வரை சாப்பாட்டு இராமனாய் இருந்த என் பசிக்கு வயிற்றை நிரப்புவதற்காகவே மூன்று வேளையும் விறகடுப்பு வைத்து சமைக்கும் சமையலறையில் உங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழித்தீர்கள்.
என் கல்வியில் நீங்கள் செலுத்திய அக்கறையில் நான் உயர் தொடக்க வகுப்புகளில் சற்று ஆர்வமாகக் கற்கத் தொடங்கினேன். என் பத்தாம் வகுப்பில் நான் பள்ளியில் முதல் மாணவனாய் வர வேண்டும் என்று நீங்கள் கண்டிருந்த கனவைக்கூட என்னால் நிறைவேற்ற இயலவில்லை. 1980 களில் என் பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணில் இரண்டு மதிப்பெண் குறைந்ததால் பள்ளியில் இரண்டாமிடம் என்ற நிலையையே என்னால் அடைய இயன்றது. நான் புத்தகங்கள் படிக்கவும் திரைப்படங்கள் பார்க்கவும் பாடல்களை ரசிக்கவும் உங்கள் இரசனையே காரணமானது.
இந்த ரசனை எனக்கு பள்ளிக்கல்வியில் பின்னடைவைக் கொடுத்திருந்தாலும் இலக்கியத்தை, திரைப்படத்தை, வாழ்க்கையை படித்தறிவதற்கு வாய்ப்பாய் அமைந்தது. மேல்நிலைக் கல்வியில் நான் 60 விழுக்காடு மதிப்பெண்களையே எடுத்திருந்தபோது நீங்கள் அழுத கண்ணீருக்கு என்னால் பதிலளிக்க இயலவில்லை. பதின்பருவச் சேட்டைகளில் மூழ்கியிருந்த என்னால் படிப்பில் கவனம் செலுத்தி மேல்நிலைக் கல்வியில் வெற்றி பெற இயலவில்லை.

மேல்நிலைக் கல்வியயில் பெற்ற தோல்வியிலிருந்து வெளியே வந்து பட்டம் படிப்பதற்காக 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கல்லூரிக்கு மூன்று ஆண்டுகள் பேருந்தில் சென்று வரும் பொழுதினில் காலை உணவையும் தயாரித்துக் கொடுத்து மதிய உணவிற்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான தாளித்த சாதத்தினையும் அதற்கான துணை உணவாக காய்கறிகளையும் தயாரித்துக் கொடுத்தனுப்புவதற்காக உங்கள் அதிகாலை அவசரப் பணிகளுக்கு நான் எப்படி நன்றி சொல்வேன்.
கல்வியியல் கல்லூரியில் படித்த போது விடுதியில் தங்கியிருந்த காலத்தில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை வீட்டிற்கு வரும் போதும் சனி, ஞாயிறுகளில் மீண்டும் நீங்கள் சமையலறையில் அதிரடியாய் களம் இறங்கி என் பசியையும் ருசியையும் உங்கள் உழைப்பால் நிறைவு செய்து அனுப்புவீர்கள்.
திருமணத்திற்காய் நான் விரும்பிய பெண்ணை மணம் முடித்து வைப்பதில் உறவுகளுக்கிடையில் உங்கள் கௌரவம் விட்டு என் விருப்பம் நிறைவேற்றியமைக்கு எப்படி நன்றி தெரிவிப்பேன்.
திருமணத்திற்குப் பிறகான வாழ்க்கையின் போதும் உயர் இரத்த அழுத்தமும் இதய நோயும் ஆட்கொண்ட என்னை இஞ்சிச்சாறு, எலுமிச்சை, தேன் கலந்த சாற்றினை வாரம் தவறாமல் ஞாயிற்றுக் கிழமைகயில் வெறும் வயிற்றில் கொடுப்பது தொடங்கி என் நலம் பேணுவதில் மருமகளோடு போட்டி போட்டு கவனிப்பது வரை இன்னும் என் வாழ்வைக் காத்திட போராடிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த உழைப்பிற்கு என்ன கைமாறு செய்வேன்.
என் மகளின் பணி நிமித்தம் என் மனைவி எனைப் பிரிந்து மகளுடன் வாழ்வதற்காகச் சென்றுள்ள இந்த ஓராண்டுக் காலத்திலும் என் பணியிடத்திற்குச் சென்று வர ஏதுவாக இந்தத் தள்ளாத வயதிலும் என் தந்தையும் நீங்களுமாய் எனைப் போற்றிப் பாதுகாக்கும் செயலனைத்திலும் வெளிப்படும் பாசத்திற்கு எவ்விதமாய் பதிலளிப்பேன்?
"ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்"
என்ற குரலை அடிக்கடி சொல்லி வளர்த்த தங்களுக்கு அந்தப் பெருமையைப் பெற்றுத் தந்து விட்டேனா என்று தெரியவில்லை. வாழ்வினை நல்ல வண்ணம் வாழ்ந்திட நல்ல வாழ்வியல் நெறிகளை எனக்குக் கற்றுத்தந்தீர்கள். இன்றளவும் நான் என் பணியில் நிறைவாக உணர்ந்து பாராட்டுகளைப் பெறும் தருணங்களில் உங்களையே நினைவுகூர்கிறேன்.
எஞ்சியிருக்கும் வாழ்க்கையில் உங்களுக்கு நல்ல மகனாகவே வாழ்ந்து மடிந்திடவே நாளும் வேண்டுகிறேன். இறைவன் எனக்கந்த வரத்தை அளிப்பானா?
அன்புத்தாயின் கால்களில் என் பணிவான நன்றியைக் காணிக்கையாக்குகிறேன். என் செயல்களால் அந்த நன்றியை வெளிப்படுத்தவே விரும்பியிருந்தேன் சொற்களால் அல்ல. ஆனால், இன்று சொற்களாலும் அதை வெளிப்படுத்தியுள்ளேன். விளம்பரத்திற்காய் அல்ல! மன நிறைவிற்காய்!
என்றும் உங்கள் மகனாய் வாழ்வதில் பெருமையடையும் மகன்
