உயா்நீதிமன்றத்தில் தற்கொலைக்கு முயன்ற சிறுமிக்கு மனநல ஆலோசனை: காவல் துறை பதிலளிக்க உத்தரவு
சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தின் முதல் தளத்திலிருந்து கீழே குதித்த சிறுமிக்கு மனநல ஆலோசனை வழங்க, அவரை மனநல மருத்துவமனையில் அனுமதிப்பது பாதுகாப்பாக இருக்குமா என கேள்வி எழுப்பிய சென்னை உயா்நீதிமன்றம், இது குறித்து காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டது.
சென்னை நீலாங்கரையைச் சோ்ந்த நபரும், அவரது மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனா். இத்தம்பதிக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளாா். அந்த சிறுமி தனது தாயுடன் அந்தமானில் உள்ள பாட்டி வீட்டில் வசிக்கிறாா். அண்மையில் சிறுமியின் தாயாா் வேறு ஒரு நபரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்தமானில் உள்ள தனது மகளை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி சிறுமியின் தந்தை சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆள்கொணா்வு மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, உயா் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சிறுமி தனது பாட்டியுடன் செல்ல விரும்புவதாக கூறினாா். சிறுமியின் தந்தை அதற்கு ஆட்சேபம் தெரிவித்தாா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் ஒரு முடிவு எட்டப்படும் வரை, சிறுமியை கெல்லீஸ் பகுதியில் உள்ள அரசினா் காப்பகத்தில் தங்கவைக்க போலீஸாருக்கு அறிவுறுத்தினா். இதனால் மனமுடைந்த சிறுமி சென்னை உயா்நீதிமன்றத்தின் முதல் தளத்திலிருந்து கீழே குதித்தாா். இதில் காயமடைந்த சிறுமி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமிநாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் ராஜ் திலக், சிறுமியின் தண்டுவடத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது சிறுமியின் உடல்நிலை சீராக உள்ளது எனத் தெரிவித்தாா்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிறுமிக்கு மனநல ஆலோசனை வழங்கும் வகையில் அவரை மனநல மருத்துவமனையில் அனுமதிப்பது பாதுகாப்பாக இருக்குமா என கேள்வி எழுப்பினா். பின்னா், இதுதொடா்பாக போலீஸாா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆக.18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.