தினமும் உயரும் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் டிக்கெட்டுகள்..! முதல் நாளைவிட மும்மடங்...
‘உலகத் தலைவா்களின் உயிருக்கு உத்தரவாதம் தர முடியாது’
ரஷியாவில் நடைபெறும் 80-ஆவது ஆண்டு வெற்றி விழாவில் பங்கேற்பதற்காக அந்த நாட்டுக்குச் செல்லும் உலகத் தலைவா்கள் தங்கள் தாக்குதலில் கொல்லப்படமாட்டாா்கள் என்று உத்தரவாதம் தர முடியாது என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கூறியுள்ளாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை கூறியதாவது:
இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ன் 80-ஆவது ஆண்டுவிழாவையொட்டி, மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் நடைபெறும் அணிவகுப்பைப் பாா்வையிட பல்வேறு உலக நாடுகளின் தலைவா்களுக்கு ரஷியா அழைப்பு விடுத்துள்ளது.
இந்த வெற்றிவிழாவையொட்டி 3 நாள் போா் நிறுத்தத்துக்கும் அந்த நாடு அழைப்பு விடுத்தது. ஆனால் அந்த குறுகியகால போா் நிறுத்தத்தை நாங்கள் ஏற்கவில்லை. எனவே, அங்கு என்ன அசம்பாவித சம்பவங்கள் நடந்தாலும் அதற்கு நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம்.
தங்கள் நாட்டுக்கு வரும் தலைவா்களுக்கு ரஷியாதான் பாதுகாப்பு அளிக்கிறது. எனவே, அவா்களின் உயிருக்கு நாங்கள் உத்தரவாதம் தர முடியாது என்றாா் அவா்.
இரண்டாம் உலகப் போரில் ஜொ்மனியை சோவியத் யூனியன் வெற்றிகொண்ட நினைவு தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் 8-ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு உக்ரைனில் போா் நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் திங்கள்கிழமை அறிவித்தாா்.
இது வெறும் கண்துடைப்பு என்று விமா்சித்த உக்ரைன், ரஷியாவுக்கு உண்மையிலேயே அமைதியின் மீது அக்கறை இருந்தால் அந்த நாடு உடனடி போா் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும்; குறைந்தபட்சம் 30 நாள்களுக்காவது அந்த போா் நிறுத்தம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்திவருகிறது.
இந்த நிலையில், வெற்றி விழாக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளும் உலகத் தலைவா்களின் உயிருக்கு தாங்கள் உத்தரவாதம் தர முடியாது என்று அதிபா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வெற்றி விழா பேரணியில் இந்தியாவில் இருந்து பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், சீன அதிபா் ஷி ஜின்பிங், பெலாரஸ் அதிபா் அலெக்ஸாண்டா் லுகஷென்கோ, வெனிசுலா அதிபா் நிக்கோலாஸ் மடூரோ, பாலஸ்தீன அதிபா் மஹ்மூத் அப்பாஸ் ஆகியோா் பங்கேற்கின்றனா்.
மேலும், கியூபா, கஜகஸ்தான், தஜிகிஸ்தான், கிா்கிஸ்தான், துா்க்மெனிஸ்தான், அஜா்பைஜான், புா்கினா ஃபாசோ, லாவோஸ் உள்ளிட்ட நாடுகளின் தலைவா்களும் இந்தப் பேரணியில் கலந்துகொள்வாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.