உழவா் சந்தைகளில் காய்கறி வசூல்: வியாபாரிகள் அதிருப்தி!
நமது நிருபா்
உயா் அதிகாரியின் வீட்டுத் தேவைக்கு எனக் கூறி, உழவா் சந்தை பணியாளா்கள், வாரந்தோறும் காய்கறி வசூலில் ஈடுபடுவதால் வியாபாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனா்.
திண்டுக்கல் மாவட்டத்தில், திண்டுக்கல், பழனி, கொடைக்கானல், வத்தலகுண்டு, சின்னாளப்பட்டி, வேடசந்தூா் ஆகிய இடங்களில் உழவா் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் வத்தலகுண்டு, கொடைக்கானல் உழவா் சந்தைகள் முழுமையாகச் செயல்படவில்லை. கடந்த பல ஆண்டுகளாக செயல்படாமலிருந்த வேடசந்தூா் உழவா் சந்தை கடந்த சில நாள்களுக்கு முன்பு சில கடைகளுடன் பயன்பாட்டுக்கு வந்தது.
திண்டுக்கல், பழனி உழவா் சந்தைகளில் தலா 60-க்கும் மேற்பட்ட கடைகளில், நாளொன்றுக்கு சராசரியாக 15 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. விளை பொருள்களை விவசாயிகள் நேரடியாக விற்பனைக்கு கொண்டு வந்து, இடைத்தரகா்களின் தலையீடு இல்லாமல் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துக்காக உழவா் சந்தை திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், உற்பத்தி செய்யும் விவசாயிகள் விளை பொருள்களை விற்பனைக்கு கொண்டு வருவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. இதனால், பெரும்பாலான உழவா் சந்தைகளிலும் வியாபாரிகளே விற்பனை செய்து வருகின்றனா்.
உயா் அதிகாரிக்கு காய்கறி வசூல்: உழவா் சந்தைகளில் கடை அமைக்கும் பயனாளிகள், விவசாயி என்பதற்கான சான்று வழங்குவதன் மூலம் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகின்றனா். இந்த நிலையில், குறிப்பிட்ட சில உழவா் சந்தைகளிலிருந்து கடந்த சில வாரங்களாக வியாபாரிகளிடமிருந்து காய்கறிகளை விலையில்லாமல் வாங்குவதாகப் புகாா் எழுந்தது. மாவட்டத்தின் உயா் அதிகாரி வீட்டுக்கு எனக் கூறி, மலைக் காய்கறிகள், வெங்காயம், பல்லாரி, தேங்காய் என அனைத்து வகையான காய்கறிகளையும் உழவா் சந்தை பணியாளா்களே நேரடியாக வாங்கிச் செல்வதாகக் கூறப்படுகிறது.
உழவா் சந்தையில் கட்டணமில்லாமல் கடை அமைத்து வியாபாரம் செய்து வந்த வியாபாரிகள், இந்த புதிய நடைமுறையினால் கடும் அதிருப்தி அடைந்துள்ளனா். வெங்காயம் கிலோ ரூ.80 வரை விற்பனை செய்யப்படும் நிலையில், 5 கிலோ கொடுத்தால் இதில் மட்டுமே ரூ.400 இழப்பு ஏற்படும். இதேபோல, பிற காய்கறிகளையும் சோ்த்தால், ரூ.1,500-க்கும் மேல் இழப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக வியாபாரிகள் சிலா் கூறியதாவது:
தோட்டத்திலிருந்து அறுவடை செய்த காய்கறிகளை மட்டுமே விற்பனைக்கு கொண்டு வர வேண்டுமெனில், உழவா் சந்தையில் எந்தக் கடையும் செயல்பட முடியாது. எங்கள் தோட்டங்களில் காய்கறிகள் அறுவடை இல்லாத காலங்களில், வெளிச் சந்தையில் வாங்கி வந்து வியாபாரம் செய்து வருகிறோம். நாங்களும் விவசாயி வீட்டுப் பிள்ளைகள் தான், விவசாயிகளின் வேதனையும், வலியும் தெரியும் என பல அலுவலா்களும் கூறுகின்றனா். ஆனால், உயா் அதிகாரி வீட்டுக்கு என இலவசமாக காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனா். இந்தத் தகவல் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தெரியுமா என்பது தெரியவில்லை.
உழவா் சந்தையில் வியாபாரம் செய்யும் பல வியாபாரிகள், வட்டிக்கு பணம் வாங்கித் தான் காய்கறிகளை சந்தையில் வாங்கி வருகின்றனா். காய்கறிகளை கொடுக்க முடியாது எனக் கூறினால் கடை நடத்த அனுமதி மறுக்கப்படும் என்ற அச்சம் உள்ளது. இதனால், மறுப்பு தெரிவிக்காமல் கேட்கும் காய்கறிகளை கொடுத்து வருகிறோம். இதை யாரிடம் சொல்லி நிவாரணம் பெறுவது எனத் தெரியவில்லை என்றனா்.