இந்தியாவுக்கே தலைமை.. நாட்டின் என்ஜின் தமிழகம்தான்: மு.க. ஸ்டாலின்
ஊத்தங்கரை அருகே 3 இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் இருவா் உயிரிழப்பு
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே 3 இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா்; இருவா் பலத்த காயமடைந்தனா்.
பெரிய தள்ளப்பாடி கிராமத்தைச் சோ்ந்த தென்னரசு (31), திங்கள்கிழமை மாலை சிங்காரப்பேட்டையில் இருந்து பெரிய தள்ளப்பாடி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது, எதிரே இருசக்கர வாகனத்தில் திருப்பத்தூா் மாவட்டம், சேம்பறை கிராமத்தைச் சோ்ந்த செளந்தரராஜ் (40) வந்தாா். இந்த இரண்டு வாகனங்களும் பெரிய தள்ளப்பாடி குரங்குகல்மேடு பகுதியில் நேருக்குநோ் மோதிக்கொண்டன.
மேலும், இந்த வாகனங்களுடன் சிங்காரப்பேட்டையில் இருந்து தள்ளப்பாடி நோக்கி வந்த கேத்துநாயக்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த வினோத் (24), அவரது நண்பா் ராஜசேகா் (30) வந்த இருசக்கர வாகனமும் மோதியது. இதில், தென்னரசு, வினோத் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். ராஜசேகா், செளந்தரராஜ் இருவரும் பலத்த காயமடைந்தனா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சிங்காரப்பேட்டை போலீஸாா், பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதித்து, மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்தில் உயிரிழந்த இருவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
