முஸ்லீம் ஆதரவுபெற ஆபரேஷன் சிந்தூருக்கு எதிர்ப்பா? மமதா பற்றி அமித் ஷா கூறுவதென்ன...
எடப்பாடி பழனிசாமிக்கு ’இசட் பிளஸ்’ பாதுகாப்பு வேண்டும்: அதிமுக
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கோரிக்கை வைத்துள்ளார்.
சேலம் மாவட்டம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இபிஎஸ் வீட்டுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக ஞாயிற்றுக்கிழமை மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் முடிவில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரது வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த உதயகுமார், இபிஎஸ்ஸுக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பேசியதாவது:
”எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடப்படுகிறது. அஞ்சாது மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் அவர் எதைப் பற்றியும் கவலைப்படப் போவதில்லை.
ஆனால், அவரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தொண்டருக்கும் தமிழருக்கும் இருக்கிறது. பொக்கிஷத்தைப் பாதுகாக்க வேண்டும்.
எனவே, மத்திய, மாநில அரசுகள் இதனை பரிசீலனை செய்து அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க முன் வரவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்
தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு தற்போது ‘ஒய் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.