Abhimanyu Easwaran: மறுக்கப்படும் வாய்ப்பு; வாக்குறுதி கொடுத்த கம்பீர்; அபிமன்யு...
எனர்ஜி லெவலை அதிகரிக்கும் ஒரு பாட்டு! - 60ஸ் பெண்ணின் ஜில் நினைவுகள்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
வெள்ளியன்று ஹலோ எஃப் எம் ரெட்ரோ ஃப்ரைடே' இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் இயக்கிய (1990) "என் உயிர்த்தோழன்" திரைப்படத்திலிருந்து ஒரு பாடல் ஒலிபரப்பானது
கங்கை அமரன் எழுத... இளையராஜா
இசையமைக்க... மலேசியா வாசுதேவன் பாடியது .
35 வருடங்கள் ஆகிறது மனம் வரவில்லை."பழைய பாடல்கள்'" லிஸ்டில் இதைச் சேர்ப்பதற்கு .அன்று முதல் முறை கேட்கும் போது என்ன மனநிலை தோன்றியதோ... அதே நிலை தான் இன்றும் ,
புதிதாக கேட்பது போன்ற ஒர் உணர்வு.
"ஹே ராசாத்தி ரோசாப்பூ வா வா வா அடியே சீமாட்டி பூச்சூட்டி
வா வா வா
தேவதையே திருமகளே
மாங்கனியே மணமகளே
மாலை சூடும் குணமகளே
வா வா வா "
படத்தை பார்த்தது.. விமர்சித்தது...
பாடலின் வரிகளைப் பற்றி ... இப்படியெல்லாம் கூட எழுத முடியுமா என்று யோசித்தது... இசைஞானியின் வியக்க வைக்கும்இசை எல்லாம் ஒரு கணநேரம் மின்னல் போல் நினைவில் வந்து போனது.

நேர்மறையான விமர்சனங்கள் பெற்ற அருமையான படம் ."என் உயிர் தோழன்"... நேற்று இன்று நாளை என்று அரசியல் சூழலை பட்டவர்த்தனமாக சொல்லியதில் நம்பர் ஒன்.
இன்றைய "புதுப்பேட்டை", மெட்ராஸ் இன்னும் வரவிருக்கும் அரசியல் படங்களுக்கெல்லாம் "என்உயிர்த் தோழன்" தான் அகராதி.
அந்த அளவுக்கு இந்தக் கால அரசியல் துரோகங்களை 35வருடங்களுக்கு முன்பே எடுத்துக்காட்டியபடம்.
குயில் குப்பத்து தர்மவாக பாபுவும், விளாத்திகுளம் கிராமத்தில் வாழும் கூத்து நடிகனாக தென்னவனும், (படத்தில் இவருக்கு பின்னணிக் குரல் இயக்குனர் இமயம்)
படித்த கிராமத்து பெண்ணாக ரமாவும் நடிப்பில் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருப்பர்.
(ஒரு வார இதழில் இதன் கதையை பாரதிராஜா எழுதினார் ."பாடகனின் குரலைக் கேட்டு நாயகி காதலில் விழுவதாக போகும்கதை. தொடர் பாதியில் கைவிட்டு படமாகியது)
ஒளிப்பதிவு பாரதிராஜாவின் ஆஸ்தான பி. கண்ணன்.
பாரதிராஜா மனதில் என்ன நினைக்கிறாரோ அதை திரையில் விஷுவலாக கொண்டு வந்த பெருமை இவரையேச்சாரும்.
இந்தப் பாடலின் ஒளிப்பதிவு கண்ணை விட்டுஅகலாது.
"ஆகாயம் பூப்பந்தல் அங்கே பொன்னூஞ்சல்
நீயாட அதில் நானாட நேரம் வந்தாட" என்ற வரிகளில் நீர் அலைகளுக்கு நடுவே ஊஞ்சல் கட்டி ஹீரோயின் ஆடிக்கொண்டே இருப்பது போல் ஒரு காட்சியை அவ்வளவு அழகாக எடுத்திருப்பார் பி கண்ணன் .
(பாடல்களின் நாமும் இருப்பது போல் ஒரு உணர்வு வரும். அந்த உணர்வு வருவதற்கு ஒளிப்பதிவாளர் தான் காரணம் )
பாடலை ரசிக்கும் வகையில் படமாக்கியிருப்பர்.

இளையராஜா இந்தப் பாடலை மலேசியா வாசுதேவனை இருமுறை பாட வைத்து அதை ஒன்றாக கலந்து இந்த பாடலை வெளியிட்டு இருப்பார். கேட்கும்போது 2 "டிராக்குகள்" ஒலிப்பது தெரியும் (கூர்ந்து கவனித்தால்).. பாடகரின் மெல்லிய எதிரொலியையும் பாட்டுடன் இணைத்திருப்பார். இது இசைஞானியின்பல புதுமைகளில் ஒன்று. இதை இரண்டு முறையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி பாடிஅசத்தியிருப்பார் மலேசியா வாசுதேவன் . (இதை பலமுறை மலேசியா வாசுதேவன் பேட்டிகளில் குறிப்பிட்டிருப்பார்)
அதிலும் குறிப்பாக பாடலின் இரு இடையிசை ஆரம்பிக்கும் முன் சில நொடிகள் மௌனம் வரும்... அந்த மௌனத்தை ஒளிப்பதிவின் மூலம் ஒளிப்பதிவாளர் பி கண்ணன் நம்மிடம் கடத்திவிடும் அழகே அழகு.
"கண்கள் இமை மூடும் போதும் உனதன்பு எனதன்பைத் தேடும்
மஞ்சம் இரண்டான போதும்
நம் எண்ணம் ஒன்றாகத் தூங்கும்
தூர இருந்தும் அருகில் இருப்போம் தனித்து இருந்தும் இணைந்து இருப்போம் "
கங்கை அமரனின் வரிகள் நம்மை அந்தசூழலுக்குள்ளே அழைத்துச் செல்லும். பாடலைக் கேட்கும்போது நாமே பாடுவது போல் இருக்கும்.
.எண்பதுகளின் காலகட்டத்தில் காதல் பாடல்களில் ஹீரோ ஹீரோயினை விட நம் மனதை ஈர்த்தது...இசைஞானியின் இசை தான் என்பதற்கு இந்தப் பாடல் ஆகச் சிறந்த உதாரணம்
மனசு ரிலாக்ஸ் ஆகணுமா... இந்தப் பாடலை ஒருமுறை கேளுங்கள்.
தன்னாலே எனர்ஜிலெவல் கூடும்.
என்றென்றும் அன்புடன்
ஆதிரை வேணுகோபால்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!