பாஜக அரசின் 100 நாள் சாதனைகள் குறித்த அறிக்கையை வெளியிட திட்டம்
`எலிகள் தொட்ட தண்ணீர் மருந்து' - பிரதமர் மோடி சென்ற கர்னி மாதா கோயில் வரலாறு என்ன?
பிரதமர் மோடி நேற்று (மே 22) ராஜஸ்தான் மாநிலம் பிகானருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு முடிவுற்ற ரூ.26,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைத்தார். அதற்குப் பிறகு தேஷ்னோக் பகுதியில் இருக்கும் புகழ்பெற்ற கர்னி மாதா கோயிலில் வழிபாடு செய்தார்.
இந்தக் கர்னி மாதா கோவில் உள்ளூர் மக்களால் எலி கோயில் என்று அழைக்கப்படுகிறது. இங்கு சுமார் 25,000 எலிகள் இருக்கின்றன எனக் கூறப்படுகிறது.
கர்னி மாதா கோயில்:
ராஜஸ்தானின் பிகானரில் உள்ள தேஷ்னோக்கில் இருக்கிறது கர்ணி மாதா கோயில். துர்கா தேவியின் அவதாரமாக நம்பப்படும் கர்ணி மாதா இந்தக் கோயிலின் முக்கிய தெய்வமாக வழிபாடு செய்கின்றனர்.
பிகானர் ராஜவம்சத்தால் பல நூற்றாண்டுகளாக வழிபடப்பட்டு வரும் இந்தக் கோயில் சரணி சகாதி பக்தர்களுக்கு மிக முக்கியமான யாத்திரைத் தலமாகும்.
யார் இந்த கர்னி மாதா?:
1387-ம் ஆண்டு ஒரு சரண் குடும்பத்தில் பிறந்த பெண் ரிகுபாய். இவருக்கு சாதிகா கிராமத்தைச் சேர்ந்த தேபாஜி சரண் என்பவருடன் திருமணம் நடந்தது. ஆனால் சில வருடங்களிலேயே உலக வாழ்க்கையில் நாட்டத்தை இழந்த அவர், அவர் தனது தங்கை குலாப்பை தனது கணவருக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு ஆன்மீகத்தில் இறங்கினார்.
உள்ளூர் மக்களுக்கு சேவை செய்துவந்ததால் அவரை எல்லோரும் கார்னி மாதா என அழைக்கத் தொடங்கினர். அவர் 151 ஆண்டுகள் வாழ்ந்ததாகக் கூறுகின்றனர். அவரது மரணத்திற்குப் பிறகு, பக்தர்கள் அவர் வழிபட்ட இடத்தில் அவரது சிலையை நிறுவினர். தற்போது அது வழிபாட்டுத் தலமாக மாறியுள்ளது.
எலிகளுக்கு என்ன சிறப்பு?
உள்ளூர்வாசிகளுக்கு, கோயிலில் உள்ள எலிகள் தெய்வத்தைப் போலவே தெய்வீகமானவை என நம்புகின்றனர்.
இது தொடர்பாக பேசிய பக்தர் ஒருவர், 'கோயில் தோன்றியதிலிருந்து எலிகள் உள்ளன. யாருக்காவது நோய் ஏற்பட்டால், அவர்களுக்கு எலிகள் அருந்திய தண்ணீரை கொடுப்பார்கள். இங்கு இருக்கும் எலிகள் சாதாராண எலிகள் அல்ல.
இவை மறுபிறவி எடுத்த மூதாதையர்கள். நல்லொழுக்க வாழ்க்கை வாழும் மக்கள் எலிகளாக மறுபிறவி எடுத்து இந்தக் கோயிலில் தஞ்சமடைவார்கள்" எனக் குறிப்பிடுகிறார். இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக இந்தக் கோயிலுக்கு சென்ற முதல் பிரதமர் மோடி ஆவார்.