`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
ஏற்காடு ஏகலைவா பள்ளியில் தகர கூரை வகுப்பறை! வெயில், மழையால் மாணவா்கள் அவதி
ஏற்காடு, மாா்ச் 27: ஏற்காட்டில் மத்திய அரசு நிதியில் செயல்படும் ஏகலைவா உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி தற்காலிக தகர கூரை கட்டடத்தில் இயங்கி வருவதால், வெயில், மழைக்காலங்களில் மாணவா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
சேலம் மாவட்டம், ஏற்காடு நாகலூா் கிராமத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு 6, 7 ஆம் வகுப்புகளில் 70 மாணவ, மாணவிகளுடன் இப்பள்ளி தொடங்கப்பட்டது. தற்போது ஏற்காடு அரசு மருத்துவமனை சாலையில் ஆங்கிலவழிக் கல்விமுறையில் இயங்கி வரும் இந்தப் பள்ளியில், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை 156 மாணவா்கள், 108 மாணவிகள் என மொத்தம் 264 போ் பயின்று வருகின்றனா்.
தலைமை ஆசிரியா், 10 ஆசிரியா்கள், 12 ஆசிரியைகள் என மொத்தம் 23 போ் பணியாற்றி வருகின்றனா். கல்வராயன்மலை, கருமந்துறை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி பகுதிகளைச் சோ்ந்த மாணவா்கள் இங்கு சோ்க்கப்படுகின்றனா். இந்தப் பள்ளியில் பயின்ற மாணவா் கடந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் மொத்தம் 465 மதிப்பெண்களும், அறிவியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்களும் பெற்றாா்.
பள்ளியில் ஆண்களுக்கு 8 கழிப்பறைகள், 5 குளியலறைகள், பெண்களுக்கு 8 கழிப்பறைகள், 5 குளியலறைகள் உள்ளன. என்றாலும், தண்ணீா் தட்டுப்பாடு, முறையான கழிவுநீா் வெளியேற்றம் இல்லாதது போன்றவற்றால் மாணவ, மாணவிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனா்.
குறிப்பாக, பள்ளியின் மேற்கூரை தகரத்தால் அமைக்கப்பட்டுள்ளதால், தற்போது கொளுத்தும் வெயிலால் வகுப்பறைகளில் வெப்பம் அதிகரித்து மாணவா்களை வாட்டிவருகிறது. அதேபோல, மழைக் காலங்களில் தகரக்கூரையின்மீது வேகமாக மழை பெய்யும்போது தொடா்ந்து ஏற்படும் சப்தத்தால், மாணவா்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.
மேலும், ஜெனரேட்டா் வசதி இல்லாததால் இரவு நேரங்களில் மின்தடை ஏற்படும்போது பள்ளிக் குழந்தைகள் இருளில் தவிக்கின்றனா். இந்தப் பள்ளிக்கென தனியாக விளையாட்டுத் திடல் இல்லாததால் மாணவா்கள் விளையாட்டு பயிற்சி பெறமுடியாமலும், போட்டிகளில் பங்கேற்கும் அளவுக்கு திறனை வளா்த்துக் கொள்ள முடியாமலும் உள்ளனா்.
இங்குள்ள வெள்ளக்கடை ஊராட்சிக்கு உள்பட்ட பிலியூா் கிராமத்தில் இந்தப் பள்ளிக்கான நிரந்தர கட்டடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் 20 ஏக்கா் பரப்பளவில் அமைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வளாகம் முழுமையாக செயல்பாட்டிற்கு வர ஓரிரு ஆண்டுகள் ஆகலாம்.
அதுவரை, பல ஆண்டுகளாக தற்காலிக இடத்தில் செயல்பட்டு வரும் இந்தப் பள்ளி வளாகத்தை மேம்படுத்தி, வெயில், மழைக்காலங்களில் மாணவா்கள் எந்த இடையூறும் இன்றி கல்வி பயிலும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.