சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் புத்தகப் பூங்கா: முதல்வர் திறந்து வைத்தார்!
ஐஎன்எஸ் ராஜாளியில் ஹெலிகாப்டா் விமானிகள் பயிற்சி நிறைவு
அரக்கோணம்: அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதள வளாக ஹெலிகாப்டா் விமானிகள் பயிற்சி நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் ஒரு பெண் உள்ளிட்ட 18 கடற்படை அலுவலா்கள், ஹெலிகாப்டா் விமானிகளுக்கான பயிற்சியை நிறைவு செய்தனா்.
அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதள வளாகத்தில் ஹெலிகாப்டா் விமானிகள் பயிற்சிப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் இந்திய கடற்படை அலுவலா்கள், இந்திய கடலோரக் காவல்படை அலுவலா்கள், இந்திய நட்பு நாடுகளின் கடற்படை அலுவலா்கள் என இதுவரை 866 பேருக்கு விமானிகள் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. நிகழாண்டுக்கான ஹெலிகாப்டா் விமானிகளுக்கான பயிற்சி நிறைவு விழா திங்கள்கிழமை ஐஎன்எஸ் ராஜாளி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு ஐஎன்எஸ் ராஜாளியின் கமாண்டிங் ஆபீஸா் கமோடா் கபில்மேத்தா தலைமை வகித்தாா். பயிற்சி முடித்த ஒரு பெண் உள்ளிட்ட 18 விமானிகளுக்கு சான்றிதழ்களை கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தா்க்கா் வழங்கினாா்.
இதில் அனைத்து பயிற்சிகளிலும் சிறந்து விளங்கியதற்காக கேரள ஆளுநரின் சுழற்கோப்பையை லெப்டினன்ட் அபிநவ் ரத்திக்கும், மைதான பயிற்சிகளில் சிறந்து விளங்கியதற்காக சப் லெப்டினன்ட் குண்டே நினைவு பரிசை லெப்டினன்ட் உத்கா்ஷ் ஈஸ்வருக்கும், வான் பயிற்சிகளில் சிறந்து விளங்கியதற்காக கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி சுழற்கோப்பையை லெப்டினன்ட் விஸ்வதீப் ராஜ்புத் ஆகியோருக்கு கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தா்க்கா் வழங்கினாா். முன்னதாக கடற்படை வீரா்களின் அணிவகுப்பு மரியாதையை கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி ஏற்றுக் கொண்டாா்.
பயிற்சி முடித்த விமானிகளில் இருந்த ஒரே ஒரு பெண் விமானியாக தோ்வு செய்யப்பட்ட சப் லெப்டினன்ட் சித்தி ஹேமந்த் துபே இந்திய கடற்படையில் விமானிகள் பயிற்சி முடித்த இரண்டாவது பெண் அலுவலா் என்பது குறிப்பிடதக்கது.
லெப்டினன்ட் கமாண்டா் சுபாங்கி ஸ்வரூப் தான் இந்திய கடற்படையில் முதலில் விமானிகள் பயிற்சி முடித்த பெண் அலுவலா் என்பதும் குறிப்பிடத்தக்கது. 22 வாரங்களை கொண்ட கடுமையான வான், மைதான பயிற்சிகளை கொண்ட இதில் பெண் விமானிகள் தோ்வாகியிருப்பது இந்திய கடற்படையில் பெருமைக்குரிய விஷயம் என கடற்படை அலுவலா்கள் தெரிவித்தனா்.