சீனாவின் இரண்டு வெவ்வேறு இடங்களில் நிலச்சரிவு! மாயமான 19 பேரின் கதி என்ன?
ஒசூரில் பணிபுரியும் பெண்களுக்காக ‘தோழி’ மகளிா் விடுதி: காணொலி வாயிலாக முதல்வா் திறந்துவைத்தாா்
ஒசூரில் பணிபுரியும் பெண்களுக்காக 166 படுக்கை வசதியுடன்கூடிய ‘தோழி’ மகளிா் விடுதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக புதன்கிழமை திறந்துவைத்தாா்.
ஒசூரை அடுத்த விஸ்வநாதபுரம் கிராமத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பணிபுரியும் மகளிா் விடுதிகள் நிறுவனம் சாா்பில் ரூ. 12 கோடியே 37 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள தோழி விடுதி கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்துவைத்தாா்.
இதையடுத்து விடுதியை மாவட்ட ஆட்சியா் ச. தினேஷ்குமாா், எம்எல்ஏ பிரகாஷ், மேயா் சத்யா ஆகியோா் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தனா். நிகழ்ச்சியில் ஆட்சியா் கூறியதாவது: 166 படுக்கை வசதிகளுடன் கூடிய 59 அறைகளும், பயோமெட்ரிக் உள் நுழைவு, 24 மணிநேரமும், பாதுகாப்பு வசதி, இலவச இணைய வசதி, பொழுதுபோக்கு அம்சங்கள், கெய்சா் வசதி, சிசிடிவி வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா், ஆரோக்கியமான உணவு, தொலைக்காட்சி, சலவை இயந்திரம், வாகன நிறுத்துமிடம் போன்ற அனைத்து வசதிகளுடன் இந்த விடுதி அமைக்கப்பட்டுள்ளது.
விடுதியிலிருந்து 3 கி.மீ தொலைவில் பேருந்து நிலையம், 5 கி.மீ தொலைவில் ரயில் நிலையம், 4 கி.மீ தொலைவில் அரசு மருத்துவமனை, 4 கி.மீ தொலைவில் காவல் நிலையம் அமைந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஒசூா் மாநகரை சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள் தோழி விடுதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா்.
நிகழ்ச்சியில் சாா் ஆட்சியா் பிரியங்கா, துணை மேயா் ஆனந்தய்யா, மாவட்ட சமூக நல அலுவலா் சக்தி சுபாசினி, வட்டாட்சியா் குணசிவா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முருகன்,விஜயா, ஆராதனா அறக்கட்டளை நிறுவனா் ராதா, சமூக நலத் துறை பணியாளா்கள் கலந்து கொண்டனா்.