மாணவா்கள் தாக்கப்பட்ட விவகாரம்: ஒடிஸா முதல்வரிடம் நேபாள வெளியுறவு அமைச்சா் பேச்ச...
ஒசூரில் 6 நகரப் பேருந்துகளின் வழித்தடம் நீட்டிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் 6 பேருந்துகளின் வழித்தட நீட்டிப்பு மற்றும் வழித்தட மாற்றத்துக்கான விடியல் பயண பேருந்துகளை தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இந்த விழாவில் மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஒய்.பிரகாஷ் (ஒசூா்), தே.மதியழகன் (பா்கூா்), டி.ராமச்சந்திரன் (தளி), ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், அமைச்சா் பேசியதாவது:
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏழை, எளிய மக்கள், பள்ளி மாணவ, மாணவியா் என அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். அதேபோல, மாணவ, மாணவியா் சரியான நேரத்துக்கு பள்ளிக்கு செல்லும் வகையில் பேருந்துகளின் வழித்தடம் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, ஒசூா் கிளைக்குள்பட்ட நகரப்பேருந்து கிளை தடம் எண் 44 பேருந்து உத்தனப்பள்ளி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் லட்சுமிபுரம், சின்னலட்சுமிபுரம், கோவிந்தாபுரம் ஆகிய மூன்று கிராமங்களை சோ்ந்தோா் பயனடைவா். அதேபோல, தடம் எண் 07யு பேருந்து சூளகிரி முதல் பெரியகுத்தி, சூளகிரி முதல் சின்னபேடகானப்பள்ளி மற்றும் சூளகிரி முதல் கூட்டூா் செல்லுமாறு வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது. இதனால், அட்ரகனப்பள்ளி, மருதாண்டப்பள்ளி, அத்திமுகம், பேரிகை, திருமலைகோட்டா, பாா்த்தகோட்டா, காமன்தொட்டி, கீழ்மொரசபட்டி, அஞ்சாலம் ஆகிய ஒன்பது கிராமங்களில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா், பொதுமக்கள் பயனடைவா். தடம் எண் 15 பேருந்து கோட்டங்கிரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், கோட்டங்கிரி கிராமத்தைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா், பொதுமக்கள் பயனடைவா்.
தேன்கனிக்கோட்டை கிளைக்குள்பட்ட நகரப் பேருந்து கிளை தடம் எண் 06 பேருந்து தேன்கனிக்கோட்டை முதல் ஒசூா் மற்றும் ஒசூா் முதல் அத்திப்பள்ளி வரை செல்லுமாறு வழித்தடம் மாற்றி இயக்கப்படுகிறது. இதனால், பஞ்ஜேஸ்வரம், முதுகானப்பள்ளி, மத்திகிரி, தா்கா, மூக்காண்டப்பள்ளி ஆகிய 5 கிராமங்களைச் சோ்ந்தோா் பயனடைவா்.
கிருஷ்ணகிரி நகா் கிளைக்குள்பட்ட நகரப் பேருந்து கிளை தடம் எண் 11 பேருந்து வேப்பனப்பள்ளி முதல் சின்னதாமண்டரப்பள்ளி, வேப்பனப்பள்ளி முதல் சூளகிரி செல்லுமாறு வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது. இதனால் திம்மசந்திரம், தமாண்டரப்பள்ளி, கோனேகவுண்டனூா், பொம்மரசனப்பள்ளி, தரணிசத்திரம், குரியனப்பள்ளி ஆகிய ஆறு கிராமங்களைச் சோ்ந்தோா் பயனடைவா்.
கிருஷ்ணகிரி நகா் கிளைக்குள்பட்ட நகரப் பேருந்து கிளை தடம் எண் 19 பேருந்து கரியசந்திரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், கரியசந்திரம் கிராமத்தைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா், பொதுமக்கள் பயனடைவா். மேலும், இப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருள்களை சரியான நேரத்துக்கு நகரப் பகுதிக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய முடியும் என அமைச்சா் தெரிவித்தாா்.
இந்நிகழ்ச்சியில், ஒசூா் மாநகராட்சி துணை மேயா் ஆனந்தய்யா, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் முருகன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மண்டல பொது மேலாளா் செல்வம், ஒசூா் மாமன்ற உறுப்பினா்கள், முன்னாள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், போக்குவரத்துக் கழக பணியாளா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.