நிறைய பேர் பாலியல் தொல்லை அளித்திருக்கின்றனர்: ஜோனிடா காந்தி
ஒடிசாவில் காலராவுக்கு 11 பேர் பலி! அரசு விடுமுறைகள் ரத்து!
ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் காலரா தொற்றால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
ஜாஜ்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், காலரா தொற்று வேகமாகப் பரவி வருகின்றது. புதிய பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் அம்மாவட்டத்தின் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட ராஜா பண்டிகை விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து, ஜாஜ்பூர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: ”மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் காலரா பரவல் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், ஜூன் 14 முதல் 16 வரை வழங்கப்பட்ட விடுமுறைகள் ரத்து செய்யப்படுகின்றன” என அவர் கூறியுள்ளார்.
அவசரகாலத்தில் அனைத்து ஊழியர்களும் பணியில் தேவைப்படுவார்கள் என்பதால் இந்த முடிவானது மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, காலரா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் நேற்று (ஜூன் 13) பலியாகியுள்ளார். இதன்மூலம், அம்மாவட்டத்தில் காலராவுக்கு பலியானோரது எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அம்மாவட்டம் முழுவதும் சுகாதாரப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், வீடுகள் தோறும் பரிசோதனைகள் நடத்தப்படுவதுடன், நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தேவையான அத்தியாவசிய வசதிகள் மற்றும் தேவைகள் அனைத்தும் அங்குள்ள மருத்துவமனைகளில் தயார்நிலை வைக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, அம்மாவட்டம் முழுவதும் சுமார் 750 பேர் காலராவால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில், 300 பேர் தற்போது அங்குள்ள வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இத்துடன், சுமார் 450-க்கும் மேற்பட்டோர் குணமாகி வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:நீட் தேர்வு முடிவுகள் வெளியானது