இயல்பு நிலைக்குத் திரும்பும் பஹல்காம்! பக்ரீத் விடுமுறையில் பெருகிய சுற்றுலா வணிகம்!
ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குள்ளான பஹல்காம் சுற்றுலாத் தலமானது இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது.
பக்ரீத் விடுமுறையையொட்டி உள்ளூர் வாசிகள் மற்றும் அண்டை மாநிலமான பஞ்சாபிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்ததால், சுற்றுலா வணிகம் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்திலுள்ள பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளை அழிக்கும் நோக்கத்தில் இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. இதனால், பஹல்காம் சுற்றுலாத் தலத்தின் வணிகம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், இரண்டு மாதங்களுக்குப் பிறகு பஹல்காம் சுற்றுலா வணிகம் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பிவருகிறது.
காஷ்மீர் பள்ளத்தாக்கின் மற்ற பகுதிகளில் உள்ள மக்கள் மற்றும் அண்டை மாநிலமான பஞ்சாபில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள், பக்ரீத் விடுமுறையையொட்டி பஹல்காம் பகுதிக்கு வருகைப் புரிந்துள்ளனர். இதனால், பஹல்காமிலுள்ள விடுதிகளின் வணிகம் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.
இது குறித்துப் பேசிய விடுதி உரிமையாளர் முகம்மது இஷாக், ''வாய்வழித் தகவல்களை விட சிறந்த விளம்பரம் ஏதும் இல்லை. பக்ரீத் விடுமுறையையொட்டி காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருகைப் புரியத் தொடங்கியுள்ளனர். இது மேலும் அதிகரிக்கும் என நம்புகிறோம்.
முன்பு இருந்ததை விட சுற்றுலா வணிகம் குறைவு என்றாலும், மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளோம். அதிக எண்ணிக்கையிலான பூங்காக்கள் மூடப்பட்டிருந்ததால், பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால், அனைத்து பூங்காக்களும் விரைவில் திறக்கப்படும் என துணை நிலை ஆளுநர் அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது'' எனக் குறிப்பிட்டார்.
கடந்த சனிக்கிழமை பேசிய ஜம்மு - காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, பஹல்காம் பகுதியில் உள்ள அனைத்து பூங்காக்களும் விரைவில் சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்காக மீண்டும் திறக்கப்படும் எனக் கூறினார்.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... சொந்த மண்ணிலேயே அன்னியரைப் போல...