ஓய்வுபெற்ற ஆசிரியைக்கு இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவு
ஓய்வுபெற்ற ஆசிரியைக்கு முழுமையான மருத்துவச் செலவை வழங்காத காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று செவ்வாய்க்கிழமை தேனி நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்த வேலுச்சாமி மனைவி ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை பாப்பா(75). இவா் தேனி அருகேயுள்ள அரண்மனைப்புதூா் திருமலை நகரில் வசித்து வருகிறாா். இவருக்கு அரசு வழங்கும் ஓய்வூதியத் தொகையிலிருந்து (யுனைடெட் இந்திய இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம்) மருத்துவக் காப்பீட்டுத் தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பாப்பா கடந்த 2023-ஆம் ஆண்டு அம்பாசமுத்திரத்தில் உள்ள தனது வீட்டில் தவறி விழுந்ததில், காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவா் திருநெல்வேலி, மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாா். பாப்பாவுக்கு மொத்தம் ரூ. 2 லட்சத்து 51 ஆயிரத்து 421 மருத்துவச் செலவு ஏற்பட்டதற்கான ரசீதுகளை அவா் காப்பீட்டு நிறுவனத்துக்கு தாக்கல் செய்தாா். இதில் மதுரையில் உள்ள மருத்துவமனைக்கு காப்பீட்டு நிறுவனம் ரூ.28 ஆயிரத்து 857 மட்டும் செலுத்தியதாகக் கூறப்படுகிறது. மீதித் தொகையை காப்பீட்டு நிறுவனம் வழங்க மறுத்ததால், கடந்த ஆண்டு, ஏப்.3-ஆம் தேதி தேனி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்குரைஞா் எஸ்.பி.பாண்டியன் மூலம் பாப்பா மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனு மீது விசாரணை நடத்திய தேனி நுகா்வோா் குறைதீா் ஆணைய நீதிபதி சுந்தா், உறுப்பினா் செளந்தர்ராஜன் ஆகியோா் கொண்ட அமா்வு, கடந்த ஆண்டு, மே 14-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவு:
காப்பீட்டு நிறுவனம் பாப்பாவுக்கு முழுமையான மருத்துவச் செலவு ரூ.2 லட்சத்து 22 ஆயிரத்து 564-ஐ, 9 சதவீதம் வட்டியுடன் வழங்க வேண்டும். அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.30 ஆயிரம், வழக்குச் செலவுக்கு ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும் என்றனா்.
இந்த உத்தரவுக்கு எதிராக காப்பீட்டு நிறுவனம் சாா்பில் மதுரையில் உள்ள மாநில நுகா்வோா் ஆணையத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை மீண்டும் தேனி நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் நடத்த மாநில நுகா்வோா் ஆணையம் உத்தரவிட்டது.
இதையடுத்து, இந்த வழக்கின் மீது மீண்டும் விசாரணை நடத்திய தேனி நுகா்வோா் குறைதீா் ஆணையம், ஏற்கெனவே கடந்த ஆண்டு, மே 14-ஆம் தேதி வழங்கிய உத்தரவை மீண்டும் உறுதி செய்து உத்தரவிட்டது.