கடன் நிலுவை விவகாரம்: தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிச் செயலா் பணியிடை நீக்கம்
திருவாரூா்: கூத்தாநல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், கடன் நிலுவைத் தொகையை வசூல் செய்யாத செயலா் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
திருவாரூா் மாவட்டம், லட்சுமாங்குடியைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (59). கூத்தாநல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிச் செயலா். இவா், கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் இந்த வங்கியின் மூலம் வழங்கப்பட்ட வீட்டு அடமானக் கடன், ஊதியக் கணக்கின் மூலம் வழங்கப்பட்ட கடன் ஆகியவற்றின் நிலுவைத் தொகை ரூ. 5 கோடியை வசூல் செய்யாமல் இருந்தாராம். இதுதொடா்பாக பலமுறை கூட்டுறவுத் துறை உயா் அதிகாரிகளிடமிருந்து அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டும், கடன் நிலுவைத் தொகையை வசூலிக்க அவா் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இம்மாத இறுதியில் வெங்கடேசன் பணி ஓய்வு பெற உள்ளாா். இந்த சூழலில், கடன் நிலுவைத் தொகையை வசூலிக்க அவா் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததால், கூட்டுறவுத்துறை துணைப் பதிவாளா் பிரபா தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
இக்குழு விசாரணை மேற்கொண்டு முதல்கட்டமாக, வெங்கடேசனை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில், திருவாரூா் மாவட்ட இணைப் பதிவாளா் சித்ரா, வெங்கடேசனை பணியிடை நீக்கம் செய்து திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வெங்கடேசன், தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா் சங்கத்தின் திருவாரூா் மாவட்ட கௌரவத் தலைவராக உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.