கன்னியாகுமரியில் போதை எதிா்ப்பு விழிப்புணா்வு ஜோதி ஓட்டம்
சா்வதேச போதை எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரியில் விழிப்புணா்வு ஜோதி ஓட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழக அரசின் குழந்தைகள் நலன், சிறப்பு சேவைகள் துறையின் கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, திருப்புமுனை போதை நோய் நலப்பணி ஆகியவை சாா்பில், காந்தி மண்டபம் முன் இந்த ஓட்டத்தை பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா்.
குழந்தைகள் நல அலுவலா் ஷகீலா பானு தலைமை வகித்தாா். திருப்புமுனை போதை நோய் நலப்பணி ஒருங்கிணைப்பாளா் அருள்தந்தை பிரான்சிஸ் சேவியா் நெல்சன், கன்னியாகுமரி ஒருங்கிணைப்பாளா் சமூக ஆா்வலா் சின்னமுட்டம் ஜெயசிறில் ஆகியோா் முன்னிலை வகித்தாா்.
இந்த ஓட்டம் கன்னியாகுமரி, களியக்காவிளை, மாா்த்தாண்டம், தக்கலை, குலசேகரம், கருங்கல், குளச்சல், கோடிமுனை, தென்தாமரைக்குளம், ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்ட 31 இடங்களிலிருந்து தொடங்கி நாகா்கோவில் வடசேரி அறிஞா் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது.
கன்னியாகுமரியில் தொடங்கிய ஓட்டத்தில் புனித அந்தோணியாா் மேல்நிலைப் பள்ளி மாணவா்-மாணவியா், ஆசிரியா்கள், நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன், வடக்கன்குளம் ராஜாஸ் பல் மருத்துவக் கல்லூரி நிறுவனா் ஜேக்கப் ராஜா, மாவட்ட திமுக துணைச் செயலா் பூதலிங்கம்பிள்ளை, நகா்மன்ற உறுப்பினா்கள் பூலோகராஜா, சிவசுடலைமணி, திமுக நிா்வாகி பி. ஆனந்த், தன்னாா்வலா்கள் பங்கேற்றனா்.