ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் துன்புறுத்தல்! ஒருவர் கைது
கன்னியாகுமரி மாவட்டத்தில் மிளகு சீசன் தொடக்கம்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் மிளகு சீசன் தொடங்கியுள்ள நிலையில், மிளகு அறுவடைப் பணி தீவிரமடைந்துள்ளது.
நறுமணப் பயிரான மிளகு, கன்னியாகுமரி மாவட்டத்தில் நல்ல மிளகு, குறுமிளகு என்று கூறப்படுகிறது. கருப்புத் தங்கம் என வா்ணிக்கப்படுகிறது. பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உணவு உண்ணலாம் என்ற முதுமொழியால் மிளகின் சிறப்பை நாம் அறிந்து கொள்ளலாம். மிளகில் உள்ள காரத்தன்மை, மருத்துவக் குணங்கள் காரணமாக அதை சமையலுக்கும், இதர மருத்துவப் பயன்பாட்டுக்கும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மிளகு சாகுபடிக்கு உகந்த காலநிலை உள்ளதால், இம்மாவட்டத்தில் மாறாமலை, பாலமோா், பால்குளம், தடிக்காரன்கோணம், சுருளகோடு, கரும்பாறை, பெருஞ்சிலம்பு, குலசேகரம், பேச்சிப்பாறை, ஆறுகாணி, பத்துகாணி, நெட்டா, பனச்சமூடு, களியல், திற்பரப்பு என மலையோரப் பகுதிகளிலும், சமவெளிப் பகுதிகளிலும் பயிரிடப்படுகிறது. மலைப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடிகள் தங்கள் நிலங்களில் அதிக அளவில் மிளகு சாகுபடி செய்கின்றனா். கொடி வகை பயிரான மிளகு கொடிகளை விவசாயிகள் பூவரசு, முள்முருங்கை, தென்னை, கமுகு, சில்வா் ஓக் உள்ளிட்ட மரங்களில் படா்த்தி தனிப் பயிராகவும், ஊடு பயிராகவும் சாகுபடி செய்கின்றனா். கன்னியாகுமரி மாவட்ட மலைப் பகுதிகளில் கரிமுண்டன் ரக மிளகும், சமவெளி பகுதிகளில் பன்னியூா் ரக மிளகும் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது.
சீசன்: கன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பா் மாதம் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்கள் மிளகு சீசன் காலங்களாகும். இக்காலங்களில் விவசாயிகள் மிளகு கொடிகளிலிருந்து மிளகுத் தாா்களை பறித்து, பின்னா் அவற்றிலிருந்து மிளகு முத்துகளை பிரித்தெடுத்து வெயிலில் உலா்த்தி விற்பனை செய்கின்றனா்.
விளைச்சல் குறைவு: மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த ஆண்டு மிளகு விளைச்சல் குறைவாகவே இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா். பருவ நிலை மாற்றங்கள் மற்றும் மிளகு கொடிகளில் பூ பிடிக்கும் மாதங்களில் தொடா் மழை போன்ற காரணங்களால் நிகழாண்டு மிளகு விளைச்சல் குறைவாக இருப்பதாக அவா்கள் கூறுகின்றனா்.
விலை அதிகம்: நிகழாண்டில் மிளகு விளைச்சல் குறைவாக இருந்தபோதிலும், கடந்த ஆண்டை ஒப்பிடும்போது மிளகுக்கு கிலோவிற்கு ரூ. 150 வரை விலை அதிகமாகக் கிடைப்பது விவசாயிகளை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. வியாழக்கிழமை (பிப்ரவரி 6 ) நிலவரப்படி குமரி மாவட்டத்தில் சுத்தம் செய்யப்பட்ட உலா்ந்த மிளகு கிலோவுக்கு ரூ. 678 ஆகவும், சுத்தம் செய்யப்படாத உலா்ந்த மிளகு கிலோவுக்கு ரூ. 658 ஆகவும், புதிய மிளகு கிலோவுக்கு ரூ. 648 ஆகவும் இருந்தது.
இதனால் மிளகு விவசாயிகள் மிளகை உற்சாகமாக அறுவடை செய்து, விற்பனை செய்து வருகின்றனா். பல விவசாயிகள் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற எதிா்பாா்ப்பில் இருப்பு வைத்து வருகின்றனா்.