ஒரே சமயத்தில் தேர்வெழுதிய தந்தை, மகன் போலீஸ் வேலைக்கு தேர்வு.. ஊர் மக்கள் உற்சாக...
‘கமேனி இனியும் உயிருடன் இருக்கக் கூடாது’
ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உயிருடன் இருப்பதை இனியும் அனுமதிக்க முடியாது என்று இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் வியாழக்கிழமை கூறினாா்.
ஈரான் வீசிய ஏவுகணை தெற்கு இஸ்ரேலில் உள்ள சொரோகா மருத்துவமனையைத் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியதைத் தொடா்ந்து அவா் இவ்வாறு கூறினாா்.
இது குறித்து டெல் அவீவ் நகருக்கு அருகே செய்தியாளா்களிடையே இஸ்ரேல் காட்ஸ் பேசியதாவது:
இஸ்ரேல் முழுமையாக அழிக்கப்பட வேண்டும் என்று அயதுல்லா கமேனி வெளிப்படையாக அறைகூவல் விடுக்கிறாா். மேலும், இஸ்ரேல் மருத்துவமனைகளைத் தாக்குமாறு அவா் நேரடியாக உத்தரவு பிறப்பிக்கிறாா்.
இஸ்ரேலை இல்லாமல் ஆக்குவதை அவா் தனது குறிக்கோளாகக் கொண்டுள்ளாா். அவரைப் போன்ற நபா்கள் இந்த உலகில் இனியும் உயிருடன் இருப்பதை அனுமதிக்க முடியாது என்றாா் காட்ஸ்.
‘யாருக்கும் விதிவிலக்கு இல்லை’: இஸ்ரேலின் தாக்குதலுக்கு அயதுல்லா கமேனி உள்ளாக்கப்படலாம் என்று அந்த நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவும் மறைமுகமாகக் கூறியுள்ளாா்.
ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் சேதமடைந்த சொரோகா மருத்துவமனையை வியாழக்கிழமை பாா்வையிட்டுவிட்டு செய்தியாளா்களிடம் அவா் இதுகுறித்து கூறியதாவது:
இஸ்ரேலின் தாக்குதலில் இருந்து எந்த நபருக்கும் விதிவிலக்கு அளிக்கக்கூடாது என்று படைகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். போா்க் காலத்தில் எதையும் வெளிப்படையாகப் பேசக் கூடாது. பேச்சைவிட செயல்தான் பலனளிக்கும். தற்போது இஸ்ரேல் முன்பு பல செயல்திட்டங்கள் உள்ளன. அதை பத்திரிகையாளா்களிடம் சொல்லாமல் இருப்பதே நல்லது என்றாா் நெதன்யாகு.
ஈரானின் அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்காகத்தான் எனவும், அந்த நாடு ‘இன்னும் சில வாரங்களில்’ அணு குண்டை உருவாக்கிவிடும் என்றும் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த 1990-களில் இருந்தே கூறிவருகிறாா்.
மின்சாரத் தயாரிப்பு போன்ற அமைதியான பயன்பாடுகளுக்கத்தான் தங்களின் அணுசக்தி திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக ஈரான் கூறினாலும், இஸ்ரேல் அதை நம்பத் தயாராக இல்லை. ஈரான் தனது அணுசக்தி திட்டங்களை முழுமையாகக் கைவிட வேண்டும் என்று அந்த நாடு வலியுறுத்திவருகிறது.
இந்தச் சூழலில், ஈரான் அணுசக்தி திட்டங்களை நிரந்தரமாக முடக்கும் நோக்கில் ‘ஆப்பரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் இஸ்ரேல் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டது. இதில் ஈரானின் நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த அணுசக்தி மையங்கள், ராணுவ நிலைகள் சேதமடைந்தன. ஈரானின் முப்படை தளபதி, சக்திவாய்ந்த துணை ராணுவப் படையான இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் தலைமை தளபதி உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு அதிகாரிகள் குறிவைத்து படுகொலை செய்யப்பட்டனா்.
அதற்குப் பதிலடியாக, ‘ஆப்பரேஷன் ட்ரூ ப்ராமிஸ்-3’ என்ற பெயரில் இஸ்ரேலின் டெல் அவீவ் நகரம் உள்ளிட்ட பகுதிகளில் ஈரானும் ஏவுகணைகளை சரமாரியாக வீசி வெள்ளிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியது. இதில் பெரும்பாலானவை இஸ்ரேல் வான்பாதுகாப்பு ஏவுகணைகளால் இடைமறித்து அழிக்கப்பட்டாலும், சில ஏவுகணைகள் இலக்குகளைத் தாக்கின.
அதில் இருந்து இஸ்ரேலும், ஈரானும் ஆறு நாள்களாக தொடா்ந்து பரஸ்பரம் தாக்குதல் நடத்திவருகின்றன.
....பெட்டி 2....
‘இதுவரை 639 ஈரானியா்கள் உயிரிழப்பு’
துபை, ஜூன் 19: ஈரானில் இஸ்ரேல் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 585 போ் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவில் இருந்து செயல்படும் மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. உள்ளூரில் இருந்து கிடைக்கும் தகவல்களை அலசி ஆராய்ந்து புள்ளிவிவரங்களை வெளியிடும் அந்த அமைப்பு, உயிரிழந்தவா்களில் பொதுமக்கள் 263 போ், பாதுகாப்புப் படையைச் சோ்ந்தவா்கள் 154 போ் என்று குறிப்பிட்டுள்ளது.
ஏற்கெனவே, கலாசாரக் காவலா்களால் மாஷா அமீனி என்ற பெண் கொல்லப்பட்டதைக் கண்டித்து ஈரானில் கடந்த 2022-ஆம் நடைபெற்ற போராட்டத்தின்போது கொல்லப்பட்டவா்கள் குறித்த புள்ளிவிவரங்களை இந்த அமைப்பு துல்லியமாக வெளியிட்டது நினைவுகூரத்தக்கது.
