கரூர்: "விஜய் மாலை 4 மணிக்கு வந்திருந்தால் கூட இந்தத் துயரைத் தடுத்திருக்கலாம்" - செந்தில் பாலாஜி
கடந்த அக்டோபர் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கரூரில் ஏற்பாடு செய்த பரப்புரையில் கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்தில் திமுகவிற்கும், செந்தில் பாலாஜிக்கும் தொடர் இருப்பதாக தவெக குற்றம் சாட்டும் நிலையில், கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசி வருகிறார்.
"கரூரில் நடந்த சம்பவம் கொடுமையானது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நேரில் வந்து ஆறுதல் தெரிவித்த முதல்வர், துணை முதல்வர் ஆகியோருக்கு நன்றி.
தமிழக அரசுடன் துணை நின்ற அனைத்துக் கட்சியினருக்கும், அமைப்பினருக்கும் நன்றி.
கரூர் துயர நிகழ்வை அரசியலாகப் பார்க்க விரும்பவில்லை. எந்த அரசியல் கட்சியின் கூட்டமாக இருந்தாலும் இனி இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்கக்கூடாது.
இதனை அரசியலாக்க வேண்டாம். தவெக கேட்ட லைட் ஹவுஸ், உழவர் சந்தை பற்றி உங்களுக்கே தெரியும்.
லைட் ஹவுஸ் பகுதிக்கு அருகே பெட்ரோல் பங்க், அமராவதி ஆறு உள்ளது. அதுமட்டுமின்றி அந்தப் பகுதியில் 7000 பேர்தான் நிற்க முடியும்.
உழவர் சந்தை பகுதியில் 5000 பேர்தான் நிற்க முடியும். தவெக கேட்ட 3 இடங்களில் வேலுசாமிபுரத்தில் தான் அதிக பேர் நிற்க முடியும்.
தங்கள் கட்சிக்கு வரும் கூட்டத்தைக் கணக்கிட்டு அதற்கு ஏற்ப இடங்களைக் கேட்க வேண்டும்.
குறித்த நேரத்தில் வந்திருந்தால் பிரச்னை ஏற்பட்டிருக்காது. 41 பேர் உயிரிழப்பைப் பொறுப்புடன் அணுக வேண்டும்.
கரூரில் வந்த கூட்டத்தினருக்கு தவெகவினர் தண்ணீரோ, பிஸ்கட்டோ கொடுக்கவில்லை.
கூட்ட நெரிசலில் தள்ளப்பட்ட மக்கள் வேறு வழியின்றி ஜெனரேட்டர் அறையை நோக்கித் தள்ளப்பட்டனர்.
மாலை 4 மணிக்கு வந்திருந்தால் கூட விஜய் இந்தத் துயர சம்பவத்தைத் தடுத்திருக்க முடியும்" என்று விளக்கம் அளித்திருக்கிறார்.