கலீல் அகமது ஓவரில் 33 ரன்கள் அடித்தது எப்படி? ரோமாரியோ ஷெப்பர்டு பதில்!
சென்னை சூப்பர் கிங்ஸின் வேகப் பந்துவீச்சாளர் கலீல் அகமதின் ஒரே ஓவரில் 33 ரன்கள் அடித்தது எப்படி என்பது குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் ரோமாரியோ ஷெப்பர்டு பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி த்ரில் வெற்றி பெற்றது.
இதையும் படிக்க: ஒரே ஓவரில் 33 ரன்கள் வழங்கிய கலீல் அகமது குறித்து சிஎஸ்கே பயிற்சியாளர் கூறியதென்ன?
முதலில் விளையாடிய ஆர்சிபி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் வீசிய கடைசி இரண்டு ஓவர்களில் மட்டும் ஆர்சிபி 54 ரன்கள் குவித்தது. அதிரடியில் மிரட்டிய ஆர்சிபி வீரர் ரோமாரியோ ஷெப்பர்டு 14 பந்துகளில் 53 ரன்கள் (4 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள்) எடுத்து களத்தில் இருந்தார். கலீல் அகமது வீசிய 19-வது ஓவரில் மட்டும் அவர் 33 ரன்கள் எடுத்தார்.
ஒரே ஓவரில் 33 ரன்கள் எடுத்தது எப்படி?
சிஎஸ்கேவின் வேகப் பந்துவீச்சாளர் கலீல் அகமது பந்துவீச்சில் ஒரே ஓவரில் 33 ரன்கள் எடுத்தது எப்படி என்பது குறித்து ரோமாரியோ ஷெப்பர்டு பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நேர்மையாக கூறவேண்டுமென்றால், பந்துவீச்சாளர் என்ன செய்கிறார் என்பதில் நான் கவனம் செலுத்தினேன். அவர் என்ன செய்ய முயற்சிக்கிறார் என்பதை கவனித்தேன். முதல் இரண்டு சிக்ஸர்கள் அடித்த பிறகு, பந்துவீச்சாளர் அழுத்தத்தில் இருப்பார் என எனக்குத் தெரியும். அவருடைய உடல் மொழியை கவனித்தேன். அவருடைய உடல் மொழியிலிருந்து அவரை மேலும் அழுத்தத்தில் வைத்திருக்க முடியும் என நினைத்தேன்.
இதையும் படிக்க: தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்: தோனி
கலீல் அகமதை கவனித்தேன். அவர் குழப்பமாக இருப்பதை உணர்ந்தேன். அதனால், அவருக்கு எதிராக அதிரடியாக விளையாட முடிந்தது. இரண்டு சிக்ஸர்கள் அடித்த பிறகு, அதே அதிரடியைத் தொடர்ந்தேன் என்றார்.
14 பந்துகளில் அரைசதம் விளாசியதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் விளாசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை கே.எல்.ராகுல் மற்றும் பாட் கம்மின்ஸுடன் இணைந்து ரோமாரியோ ஷெப்பர்டு படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.