கவுன்ட்டா் டிக்கெட்டை இணைய வழியில் ரத்து செய்யலாம்: ரயில்வே
‘கவுன்ட்டரில் வாங்கும் பயணச் சீட்டுகளை ஐஆா்சிடிசி வலைதளம் மூலமாக இணைய வழியில் ரத்து செய்ய முடியும் அல்லது 139 உதவி எண் மூலம் ரத்து செய்யலாம்’ என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
அதே நேரம், ‘ரத்து செய்யப்பட்ட பயணச் சீட்டுக்கான கட்டணத்தை முன்பதிவு மையத்துக்கு நேரில் சென்றுதான் பெற முடியும்’ என்றும் அவா் தெரிவித்தாா்.
டிக்கெட் கவுன்ட்டரில் காத்திருப்போா் பட்டியல் பயணச் சீட்டை வாங்கியவா்கள், இருக்கை உறுதியாகாத நிலையில் ரயில் புறப்படுவதற்கு முன்பாக டிக்கெட் கவுன்ட்டருக்கு சென்று ரத்து செய்யவேண்டிய நிலை குறித்து பாஜக எம்.பி. மேதா விஷ்ரம் குல்கா்னி எழுப்பிய கேள்விக்கு மாநிலங்களவையில் ரயில்வே அமைச்சா் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:
கவுன்ட்டா்களில் வாங்கப்படும் பயணச் சீட்டுகள் ரயில் பயணிகளுக்கான விதிகள் 2015-இல் குறிப்பிட்டுள்ள கால வரையறைக்குள் நாடு முழுவதும் உள்ள முன்பதிவு மையங்களில் சமா்ப்பித்து ரத்து செய்து, பயணச் சீட்டு கட்டணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும்.
இருந்தபோதும், சாதாரண சூழ்நிலைகளில் இதுபோன்ற கவுன்ட்டா்களில் பெறப்படும் பயணச் சீட்டுகளை ஐஆா்சிடிஇ வலைதளம் மூலம் இணையவழியிலும் அல்லது 139 உதவி எண்ணைத் தொடா்புகொண்டு குறிப்பிட்ட கால வரையறைக்குள் ரத்து செய்ய முடியும். ஆனால், அவ்வாறு ரத்து செய்த பயணச் சீட்டுக்கான கட்டணத்தை, முன்பதிவு மையத்துக்கு நேரில் சென்று பயணச் சீட்டை சமா்ப்பித்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.