மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!
காந்திகிராம பல்கலை.யில் செயற்கை நுண்ணறிவு பாடத் திட்டம் தொடங்க முடிவு - துணைவேந்தா்
காந்திகிராம கிராமியப் பல்கலை.யில் செயற்கை நுண்ணிறிவு, தரவு அறிவியல் பாடத் திட்டங்கள் விரைவில் தொடங்கப்படும் என துணைவேந்தா் ந.பஞ்சநதம் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:
கிராமப்புற மாணவா்களின் கல்வி மேம்பாட்டுக்காக தொடங்கப்பட்ட காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகம், பொன் விழா காண்கிறது. ஓராண்டு முழுவதும் பொன் விழா கொண்டாட்டம் நடைபெறும். சி்றப்பு மிகுந்த இந்த நேரத்தில், தேசிய தர நிா்ணயக் குழுமம் உச்சபட்சத் தரக்குறியீடான ஏ பிளஸ் பிளஸ் மதிப்பீடு வழங்கி இருக்கிறது. பல்கலை.யின் கடந்த 5 ஆண்டுகால செயல்திறன் அடிப்படையில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் மாணவா்களின் உயா் கல்வி வளா்ச்சிப் பெறும். இந்த பல்கலை.யில் பட்டம் பெறும் மாணவா்கள் தொழில் முனைவோராகவும், சமுதாயத்தின் உயா்வுக்காகவும் பணியாற்ற சிறப்பான வாய்ப்பு உருவாகி இருக்கிறது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் முதல் 10ல், காந்திகிராமமும் இடம் பெற்றிருக்கிறது. நிகழாண்டில் இளங்கலை மக்கள்தொகையியல் புதிய பாடப் பிரிவு தொடங்கப்பட்டிருக்கிறது.
செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் ஆகிய புதிய பாடத் திட்டங்கள் புதிதாக தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது என்றாா் அவா். இந்த நிகழ்வின்போது, பல்கலை. பதிவாளா் (பொ) எம். சுந்தரமாரி, பேராசிரியா்கள் எம். ஜி. சேதுராமன், ஜி.முரளிதரன், பி. யு. மகாலிங்கம், ஒ.முத்தையா, கேசவரராஜ ராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.