உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்...
ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியில் டிஆர்எஸ் தொழில்நுட்பம் தொடர்பான சர்ச்சை எழுந்தது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 224 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 247 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இந்திய அணியைக் காட்டிலும் இங்கிலாந்து 23 ரன்கள் முன்னிலை பெற்றது.
டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?
இங்கிலாந்தைக் காட்டிலும் 23 ரன்கள் பின் தங்கிய நிலையில், இந்திய அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கி விளையாடி வருகிறது.
இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியபோது, 13-வது ஓவரில் ஜோஷ் டங்கின் பந்துவீச்சில் சாய் சுதர்சன் தடுமாறி கீழே விழுந்தார். பந்து பேடில் பட்டதால் இங்கிலாந்து வீரர்கள் நடுவரிடம் அவுட் கேட்டு முறையிட்டனர். கள நடுவரான குமார் தர்மசேனா அவுட் கொடுக்க மறுத்து, பந்து பேட்டில் பட்டதாக சமிக்ஞை செய்தார்.
அவர் சமிக்ஞை செய்தது ஃபீல்டிங்கில் இருந்த இங்கிலாந்து அணிக்கு நடுவரின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செல்லலாமா? வேண்டாமா? என்பதற்கு உதவுவது போன்று இருந்ததால், அவரது சைகை சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக முன்னாள் நடுவர் அனில் சௌதரி பேசியதாவது: கள நடுவரின் சைகை எதிரணிக்கு உதவியாக இருக்கும் எனக் கூறமாட்டேன். சில நேரங்களில் இது போன்று நடக்கும். ஆனால், சர்வதேசப் போட்டிகளில் நடுவரின் முடிவை மேல்முறையீடு செய்யும் டிஆர்எஸ் தொழில்நுட்பம் இருப்பதால், நடுவர் 15 விநாடிகளுக்கு எந்த ஒரு சைகையும் செய்யக் கூடாது.
ஓவல் டெஸ்ட்டின்போது, கள நடுவருக்கு ஏதோ ஆகியுள்ளது. ஆனால், இதுபோன்று நடந்திருக்கக் கூடாது. டிஆர்எஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் போட்டிகளில் நடுவர்கள் சைகைகள் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. ஏனெனில், அது உதவுவது போன்ற செயலாக மாறிவிட வாய்ப்பிருக்கிறது. தெரிந்தோ, தெரியாமலோ இதுபோன்ற விஷயங்கள் எப்போதும் நடக்கக் கூடாது என்றார்.
இதையும் படிக்க: ஒரே ஓவரில் 45 ரன்கள்... 43 பந்தில் 153 ரன்கள் குவித்த ஆப்கன் வீரர்!
Controversy arose regarding the DRS technology in the last Test match between India and England.