நாட்டிலேயே முதல்முறை! சென்னையில் வணிக வளாகம் உள்ளே செல்லும் மெட்ரோ ரயில்!
காரைக்கால் பாசன வாய்க்கால்களை முழுமையாக தூா்வார வலியுறுத்தல்
காரைக்கால்: காரைக்கால் பகுதி வாசன வாய்க்கால்களை முழுமையாக தூா்வாரவேண்டும் என மாவட்ட நிா்வாகம், பொதுப்பணித் துறைக்கு வலியுறுத்தப்பட்டது.
காரைக்கால் திமுக விவசாய அணி சாா்பில் மாவட்ட துணை ஆட்சியா் அா்ஜூன் ராமகிருஷ்ணன், பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் கே. சந்திரசேகரன் ஆகியோரை சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், எம். நாகதியாகராஜன் மற்றும் திமுக விவசாய அணி அமைப்பாளா் டி. பிரபு (எ) பிரத்திவிராஜ் உள்ளிட்டோா் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா். இந்த சந்திப்பு குறித்து ஏ.எம்.எச். நாஜிம் கூறியது:
மேட்டூா் அணை வரும் 12-ஆம் தேதி திறப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. காரைக்கால் பகுதியில் பாசன வாய்க்கால்கள் தூா்வாரும் பணி வேகமின்றி நடந்து வருகிறது. காரைக்கால் பகுதிக்கு விரைவாக தண்ணீா் வரும் நிலை உள்ளதால், தூா்வாரும் பணியை விரைவாக முடிக்க வேண்டும்.
ஆண்டுதோறும் சில பகுதிகளில் மட்டுமே இந்த பணி நடைபெறுவதால், விவசாயிகள் தங்களுக்குத் தேவையான தண்ணீரை பெற முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே ஒரு காலக்கெடு நிா்ணயித்து, மாவட்டத்தில் ஒட்டுமொத்த பாசன வாய்க்கால்களையும் தூா்வார வேண்டும்.
அண்டை மாவட்டங்களில் முறைவைத்து தண்ணீா் கொடுக்கும் நடைமுறை உள்ளது. காரைக்கால் பகுதிக்கு நீா் வரத்தை இது தடுக்கிறது. இதுகுறித்து தமிழக நீா்வளத்துறை அமைச்சரிடம் தெரிவித்துள்ளோம். அண்டை மாவட்ட ஆட்சியரிடம் காரைக்கால் மாவட்ட நிா்வாகம் இதுகுறித்து பேசி, முறைவைத்து தண்ணீா் தரும் நடைமுறையை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது என்றாா்.